சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக திருத்த சட்டமூலத்திற்கு எதிராக முன்னிலை சோஷலிஸக் கட்சி ஆர்ப்பாட்டம் செய்வது தொடர்ப்பாக ‘லங்காவீவ்ஸ்” இணையத்திற்கு கருத்து தெரிவித்த அக்கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட,
‘இந்த சட்டமூலத்தின் வாயிலாக இந்நாட்டு கல்வியை தனியார்மயப்படுத்த அரசாங்கம் திட்டமிடுகிறது. மாத்திரமல்ல, தனியார் பல்கலைக் கழகங்களை சட்டபூர்வமாக்கி, கல்வியை இராணுவமயமாக்கும் திட்டமும் இந்த சட்டமூலத்தின் வாயிலாக முன்னெடுக்கப்படுகிறது.
இந்த சட்டமூலம் சர்.ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக் கழக சட்டமூலம் என்ற பெயரில் கடந்த மார்ச் 26ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமூலம் 2018 ஏப்ரல் 21ம் திகதி நல்லாட்சி அரசாங்கம் கொண்டுவந்த சட்டமூலமாகும்.
அப்போதைய நல்லாட்சி அரசாங்கம் இந்த சட்டமூலத்தை கொண்டுவரும் போது தற்போதைய அரசாங்கத்தில் உள்ளவர்கள் அதை எதிர்த்தார்கள். நாட்டு மக்களும் அதை எதிர்த்தார்கள். இதனால் நல்லாட்சி அரசாங்கம் அதை திரும்பப் பெற்றுக் கொண்டது.
ஆனால், தற்போதைய அரசாங்கம் இந்த சட்டமூலத்தை இரகசியமாக பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. இந்த சட்டமூலத்தில் உள்ளபடி, கொத்தலாவல பாதுகாப்புக் கல்லூரியின் கிளைகள் என்ற வகையில் பணம் அறவிடும் பட்டக் கடைகளை நாடு பூராவும் திறக்க முடியும்.
இது சம்பந்தமாக தீர்மானிக்கும் அதிகாரம் பல்கலைக் கழக ஆணையத்திற்கோ, உயர் கல்வி அமைச்சிற்கோ வழங்கப்படாமல், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக் கழகத்தின் இராணுவ சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக் கழகத்தின் கிளை என்ற பெயரில் நாடு பூராவும் தனியார் பல்கலைக் கழகங்களை அமைக்கும் நிலை உருவாகும்”. எனக் கூறினார்.