மின்னேரிய தேசியப் பூங்காவில் யானைக் குட்டியொன்றை கடத்தியமை தொடர்பில் விசாரனை செய்வதற்காகச் சென்ற வன பாதுகாப்பு அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் சம்பந்தப்பட்ட இராணுவ மேஜர் ஜெனரல் இன்று (1) காலை ஹபரண பொலிஸில் சரணடைந்துள்ளார்.
கடந்த 23ம் திகதி இரவு மின்னேரிய தேசியப் பூங்காவில் சட்டவிரோதமாக யானைக் குட்டியொன்று கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலின் பேரில் வீதித்தடை அமைத்து பரிசோதனை செய்த வேளையில் பூங்காவிற்குள்ளிருந்த வந்த இரு வாகனங்கள் தடையையும் மீறி சென்றதாகவும், அவை இராணுவத்திற்குச் சொந்தமான வாகனங்கள் என அடையாளம் காணப்பட்டு, அவற்றை பின் தொடர்ந்து சென்றதாகவும் வன பாதுகாப்பு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.
மேற்படி வாகனங்களை பின் தொடர்ந்து செல்லும் போது பின்னால் சில இராணுவ வாகனங்கள் வந்துள்ளன. அந்த வாகனங்களில் வந்த ஒரு இராணுவ அதிகாரி ஹபரண பிரதேசத்தில் வன சீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரியொருவரைத் தாக்கி அச்சுறுத்தியதாகவும் சம்பவ இடத்திற்கு பொலிஸார் வந்ததன் பின்னர் இராணுவத்தினர் அவ்விடத்திலிருந்து சென்று விட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.
மேற்படி சம்பவத்துடன் தொடர்புடையாதக் கூறப்படும் இராணுவ மேஜர் மற்றும் ஏனைய சந்தேக நபர்களையும் வாகனங்களையும் கைது செய்யுமாறு நீதிமன்றம் நேற்று (30) உத்தரவிட்டுள்ளது.