15 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் சம்பந்தமாக கைது செய்யப்பட்ட மாலைதீவுகளின் முன்னாள் ராஜாங்க நிதி அமைச்சர் இம்மாதம் 16ம் திகதி வரை தடுப்புக் காவலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
15 வயதுடைய ஒரு சிறுமி பணத்திற்கு விற்கப்படும் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின்படி மாலை தீவுகளின் முன்னாள் ராஜாங்க அமைச்சர் உட்பட மூவர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் துஸ்பிரயோக தடுப்பு பணியகத்தின் தகவல்களின்படி, கைது செய்யப்பட்ட மாலைதீவு பிரஜை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதன் பின்னர் அந்நாட்டு ஊடகங்கள் இது குறித்து செய்தி வெளியிட்டதன் பின்புதான் அவர் மாலைதீவுகளின் முன்னாள் நிதியமைச்சர் என்பது தெரியவந்துள்ளது.
மேற்படி நபர் அவரது மனைவியுடன் 2018லிருந்து இலங்கையில் தங்கியிருப்பதாக தெரியவந்துள்ளது.இங்குள்ள தனியார் பல்கலைக் கழகமொன்றில் பட்டப் படிப்பை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டு மாணவர்க்கான விசா பெற்றுள்ளமையும் தெரிய வந்துள்ளது. எதிர்வரும் 16ம் திகதி அடையாள காண்பதற்கான அணிவகுப்பொன்றில் இவர் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
15 வயது சிறுமி மீதான துஸ்பிரயோகம் சம்பந்தமான குற்றச்சாட்டின் பேரில் இதுவரை 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சிறுமியின் தாய், ஒரு தேரர், மிஹிந்தலை பிரதேச சபையின் பிரதித் தலைவரும் உள்ளனர்.
இது தொடர்பில் மேலும் 12 பேர் கைது செய்யப்படவிருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.