தமது அரசியல் நோக்கங்களுக்காக தனிமைப்படுத்தல் விதிமுறைகளை பயன்படுத்தி, அடக்கமுறை பலத்தையும் பிரயோகித்து மக்களின் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுவதாக முன்னிலை சோஷலிஸக் கட்சியின் செயலாளர் குமார் குணரத்னம் கூறினார்.
நேற்று (9) கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர் தொடந்து பேசும் போது,” நாட்டு மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு இல்லாத போது மக்கள் தமது உரிமைகளுக்காக வீதியில் இறங்குவார்கள்.
இந்த அரசாங்கம் புதிய விளையாட்டை ஆரம்பித்துள்ளது. தனது உரிமைகளுக்காக வீதியில் இறங்கும் மக்களை தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறினார்கள் என பொய் குற்றம் சுமத்தி கைது செய்கிறார்கள். தற்போது, இலவசக் கல்வி, சுகாதாரம் போன்ற அனைத்தையும் இராணுவத்திடம் ஒப்படைக்க அரசாங்கம் திட்டமிடுகிறது. இலவச கல்விக்காக குரலெழுப்பிய பல்கலைக் கழக மாணவர்கள், தொழிலாளர் தலைவர்கள், ஆசிரியர் சங்கங்களின் தலைவர்கள் நியாயமின்றி தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்கள்.
இலங்கையின் ஆட்சியை சீனாவிடம் ஒப்படைத்து விட்டு பார்த்துக் கொண்டிருக்குமாறு அரசாங்கம் சொல்கிறதா? எமது நாட்டின் வளங்களின் மீதான நப்பாசையால் சீனா இந்நாட்டை கொஞ்சம் கொஞ்சமாக அடிமைப்படுததிக் கொண்டு வருகிறது. கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை வரும்போது தமது இயலாமையை மறைத்துக் கொள்வதற்காக இந்த அரசாங்ம், காலத்திற்கு காலம் ஒவ்வொரு கதைகளை கூறிக்கொண்டிருக்கிறது” எனவும் கூறினார்.