உயர்கல்வியை இராணுவமயமாக்குவதற்கு எதிராக கொழும்பில் இடம்பெற்ற போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட சிரேஷ்ட தொழிற்சங்கத் தலைவர் உள்ளிட்ட குழு மீதான தாக்குதல் சர்வதேச அளவில் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது.
"தொழிற்சங்கவாதிகள் மற்றும் அரசியல் ஆர்வலர்கள் மீது இலங்கை அரசாங்கத்தின் அருவருப்பான தாக்குதலை நாங்கள் கண்டிக்கிறோம். இலங்கை தொழிலாளர்கள் மற்றும் இடதுசாரிகளுடனான எங்கள் ஒற்றுமை இத்தகைய கடினமான சூழ்நிலைகளில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது ”என அவுஸ்திரேலியா - விக்டோரியாவில் செயற்படும் சோசலிஸ அமைப்பு, சமூக ஊடகத்தின் ஊடாக தெரிவித்துள்ளது.
நீதிமன்றம் பிணை வழங்கிய பின்னர் அவர்கள் அழைத்துச் செல்லப்படும் இடத்தையேனும் அறிவிக்காமல், காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அவர்களை அழைத்துச் சென்றதாக அவர்கள் சார்பு சட்டத்தரணிகள் தெரிவிக்கின்றனர்.
நாடளாவிய ரீதியில் செயற்படும் ஆசிரியர் சங்கத்தின் தலைவரும், சிரேஷ்ட தொழிற்சங்கத் தலைவருமான ஜோசப் ஸ்டாலின் உட்பட சுமார் 30 பேர் நீதிமன்றத்தில் இருந்து துறைமுக காவல்நிலையத்திற்கு பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், "நீண்ட பயணத்திற்கு" தயாராகுமாறு காவல்துறையினர் அவர்களிடம் கூறியுள்ளனர்.
ஜோசப் ஸ்டாலின்
எவ்வாறாயினும், குறைந்தது அவர்கள் அழைத்து செல்லப்படும் இடத்தைப் பற்றிய தகவலைக்கூட வழங்காமல், அவர்களில் எவருக்கும் படுக்கையைத் தவிர மாற்று உடைகளை எடுக்கவேனும் அனுமதிக்கப்படவில்லை என களத்தில் இருந்த ஊடகவியலாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, தொற்றுநோய் சட்டங்களை மீறியதாகக் கூறி கொழும்பில் உள்ள ஒரு ஹோட்டலில் விருந்துபசார நிகழ்வை நடத்திய ஒரு நடிகை உள்ளிட்ட குழுவிற்கு "அனுதாபத்துடன்" வசதிகளை வழங்கியிருந்த அரசாங்கம், உயர்கல்வியை இராணுவமயமாக்குவதை எதிர்த்தமையால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர்களுக்கு வழங்கவில்லை.
பிரபல நடிகை பியுமி ஹன்சமாலி உள்ளிட்ட ஒரு குழுவை தனிமைப்படுத்தலுக்காக காவல்துறையினர் அழைத்துச் சென்றபோது, அவர்களுக்குத் தேவையான ஆடைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை காவல் நிலையத்திற்குள்ளேயே கிடைக்கச் செய்வதில், காவல்துறை பொறுப்பான அமைச்சரே தலையீடு செய்திருந்தார்.
"இலங்கை காவல்துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற அடிப்படையில் பொதுமக்கள் விடுத்த வேண்டுகோளை அனுதாபத்துடன் பரிசீலித்ததாகவும், தலையிட்டதாகவும்” பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரின் ஊடக செயலாளர் பின்னர் ஒரு அறிக்கை ஊடாக தெறிவித்திருந்தார்.
எவ்வாறெனினும், நேற்றைய தினம் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட தரப்பிற்கு எதிராக எந்தவொரு சட்டத்தையும் நடைமுறைப்படுத்தியதாக தெரியவில்லை.
ஒரு போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட துமிந்த நாகமுவ உள்ளிட்ட பலர் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த கடந்த 7ஆம் திகதி பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
போராட்டக்காரர்கள் கைது
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டத்திற்கு எதிராக இலங்கை ஆசிரியர் சங்கம், முன்னிலை சோசலிஸகட்சி மற்றும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய உறுப்பினர்கள் ஜூலை 8 வியாழக்கிழமை காலை நாடாளுமன்ற சுற்றுவட்டம் அருகே போராட்டம் நடத்தியது.
இலவச கல்விக்கான உரிமையைப் பாதுகாப்பதற்கும் இராணுவமயமாக்கலுக்கும் எதிராக 'இலவச கல்விக்கான மாணவர் இயக்கம்' இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.
பௌத்த பிக்குகள் மற்றும் வயதான பெண்கள் உட்பட 30ற்கும் மேற்பட்ட செயற்பாட்டாளர்களை பொலிஸார் கைது செய்து, தொற்றுநோய் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியது.
கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நிரஞ்சனா டி சில்வா சந்தேகநபர்களை பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார். அவர்களைத் தனிமைப்படுத்த வெலிகடை காவல்துறை நீதிமன்றத்திடம் அனுமதி கோரியபோது, அவர்களைத் தனிமைப்படுத்த நீதிமன்றத்திற்கு எவ்வித அதிகாரமும் இல்லை என நீதவான் தெரிவித்திருந்தார்.
எனினும், நீதிமன்றத்திற்கு வெளியே அரசியல் மற்றும் தொழிற்சங்க செயற்பாட்டாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், காவல்துறையினர் அவர்களை வலுக்கட்டாயமாக தனிமைப்படுத்தலுக்கு அழைத்துச் சென்றனர்.