தனிமைப்படுத்தல் என்பது சுகாதார வழிமுறையே தவிர, அதை தண்டனையாகவோ, தடுத்து வைப்பதற்கான முறையாகவோ பயன்படுத்தக் கூடாதென இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டுகிறது. சில நாட்களுக்கு முன்னர் கொத்தலாவல சட்டமூலத்திற்கு எதிராக நடைபெற்ற அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்ட, தற்போது கட்டாய தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளவர்கள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே சடடத்தரணிகள் சங்கம் மேற்கண்டவாறு கூறியுள்ளது.
மேற்படி விடயங்கள் தொடர்பில் பொலிஸ் மாஅதிபருக்கும், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கும் சட்டத்தரணிகள் சங்கம் கடிதம் அனுப்பியுள்ளது. வைரஸ் தொற்றியவர்களையோ, வைரஸ் தொற்றியவர்களாக சந்தேகப்படுபவர்களையோ மாத்திரமே தனிமைப்படுத்தலுக்கு அனுப்ப வேண்டுமென தனிமைப்படுத்தல் சட்டத்தை மேற்கோள் காட்டி சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டுகிறது.
தனிமைப்படுத்தல் என்பது சுகாதார நடவடிக்கையேயன்றி தண்டனை வழங்கும் முறையாகவோ, தடுத்து வைப்பதாற்கான முறையாகவோ பயன்படுத்தக் கூடாதெனவும், நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டவர்களை வலுக்கட்டாயமாக தடுத்து வைத்திருப்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகுமெனவும் சட்டத்தரணிகள் சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
தொடந்தும் விளக்கமளித்த சங்கத்தின் பிரதிநிதிகள் கைது செய்தமை மற்றும் அவர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நடவடிக்கை சம்பந்தமான சட்டங்களை விளக்கமாக கூறியதுடன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பல்வேறு சந்தர்ப்பங்களில் பொலிஸார் அத்துமீறி பலத்தை பிரயோகித்துள்ளமை சம்பந்தமாகவும் தாம் கவனம் செலுத்துவதாகவும் கூறியுள்ளனர்.