வவுனியா தாண்டிக்குளம் சாந்தசோலை பிரதான ஏ 9 வீதியில் இன்று சௌபாக்கியா கிராம நிகழ்ச்சித்திடம் மேற்கொள்வதற்கு அநுராதபுரத்திலிருந்து சென்ற புகையிரதத்திணைக்கள உத்தியோகத்தர்கள் சிலரினால் இடையூறு ஏற்படுத்துவதாக கிடைத்த தகவலை சேகரிப்பதற்குச் சென்ற ஊடகவியலாளருக்கு அங்கு சிவில் உடை தரித்து நின்ற பொலிஸ் அதிகாரியினால் இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைவாக கிராமங்கள் தோறும் சௌபாக்கியா கிராம நிகழ்ச்சித்திடம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் நாளைய தினம் (13) வவுனியா சாந்தசோலையில் சௌபாக்கியா பன்னீர் உற்பத்திக் கிராம நிகழ்சித்திட்டம் அங்குரார்ப்பான நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வை ஏற்பாடு செய்வதற்காக அங்கு சென்ற பொதுமக்களை அநுராதபுரத்திலிருந்து வந்த புகையிரதத்திணைக்கள உத்தியோகத்தர்கள் தடுத்து அவர்களது கடமைகளை செய்யவிடாமல் தடுக்கப்பட்டனர்.
இவ்வியடம் குறித்து அப்பகுதி கிராம அலுவலகர் ஊடாக பிரதேச செயலாளருக்கு அறிவிக்கப்பட்டது இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பிரதேச செயலாளர் புகையிரதத்திணைக்கள உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடி நாளை இடம்பெறவுள்ள நிகழ்வுகளை தடுப்பதற்கு மேற்கொண்ட முயற்சிகளை முறியடித்துள்ளார்.
இந்நிலையில் அச்சம்பவங்களைச் சேகரிப்பதற்காக சென்ற ஊடகவியலாளரின் கடமைகளுக்கு அங்கு சிவில் உடையிலிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் இடையூறுகளை ஏற்படுத்தி அச்சுறுத்தும் நடவடிக்கையையும் மேற்கொண்டார்.
இவ்வாறு பொலிசார் சிவில் உடைகளில் வந்து பொதுமக்களின் தகவல்களை சேகரிக்கும் ஊடகவியலாளர்களின் கடமைகளுக்கு இடையூறுகளையும் அச்சுறுத்தும் நடவடிக்கைகளையும் தடுத்து நிறுத்துவதற்குரிய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செயற்படுவதற்குரிய நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு என்பன எடுக்கப்படவேண்டும்.