தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக இருந்த காலத்தில் இடம்பெற்ற, வெலிகடை படுகொலையின் முக்கிய நேரடி சாட்சியாளருக்கு மீண்டும் உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக, கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழு தெரிவித்துள்ளது.
இனந்தெரியாத இரண்டு நபர்கள் ஜூலை 7ஆம் திகதி மாளிகாவத்தையில் உள்ள லக்கிரு செவன புகையிரத குடியிருப்பில் வசிக்கும் சுதேஷ் நந்திமல் சில்வாவின் அயல் வீட்டுக்காரர்களிடம் அவர் எங்கு செல்கின்றார்? என்ன செய்கின்றார்? போன்ற விபரங்களை கேட்டறிந்துள்ளதாக அந்த அமைப்பின், தலைவர், சட்டத்தரணி சேனக பெரேரா ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த விடயமானது எதிர்காலத்தில் சுதேஷ் நந்திமல் சில்வாவின் உயிருக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை வெளிக்காட்டுவதாக அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
சுதேஷ் நந்திமல் சில்வா
இது தொடர்பாக காவல்துறையினரிடம் ஏற்கனவே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தாக கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு தெரிவித்துள்ளது.
"CIB 1/117/42 என் எண்ணின் கீழ், அதேநாளில் நாளில் (2021.07.07) தெமடகொட காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதோடு, இந்த சம்பவம் தொடர்பாக மேலும் இரண்டு நபர்களிடம் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.”
இந்த சம்பவம் குறித்த காட்சிகள் அடங்கிய சிசிரிவி காணொளிக் காட்சிகள் விசாரணைக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் தலைவர் சட்டத்தரணி சேனக பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
சட்டத்தரணி சேனக பெரேரா
சுதேஷ் நந்திமல் சில்வாவின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த முயற்சிப்பவர்களையும், அவர்களின் நலனுக்காக செயற்படுவோரையும் உடனடியாக அடையாளம் கண்டு, அவரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு வலியுறுத்தியுள்ளது.
2012 வெலிகடை சிறைச்சாலை படுகொலைக்கு சாட்சியாக இருப்பதாலும், பொதுவெளியில் அரசாங்கத்தின் சட்டவிரோத நடவடிக்கைகளை விமர்சிப்பதாலும் சுதேஷ் நந்திமல் கடந்த காலத்தில் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு உள்ளானதாக சட்டத்தரணி சேனக பெரேரா தெரிவித்துள்ளார்.
மேலும், சுதேஷ் நந்திமால் தற்காலிகமாக தங்கியிருந்த அவரது சகோதரியின் வீட்டிற்கு அடையாளம் தெரியாத குழுவு ஒன்று கடந்த காலத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய விடயத்தை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மரண அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் சுதேஷ் நந்திமல் சில்வா, கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் பொதுச் செயலாளராகவும் செயற்படுகின்றார்.
நவம்பர் 9, 2012ஆம் ஆண்டு, ஆயுதமேந்திய பாதுகாப்புப் படையினர் வெலிகடை சிறைச்சாலையில் நுழைந்ததால், 27 கைதிகள் கொல்லப்பட்டதோடு, குறைந்தது 40 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.