இணையத்தில் வெளியிடப்பட்ட ஒரு சிறுகதையின் அடிப்படையில் தன்னை கைது செய்து தடுத்து வைத்தமை அடிப்படை உரிமை மீறல் எனத் தெரிவித்து, விருது பெற்ற எழுத்தாளர் தாக்கல் செய்த மனு ஒக்டோபர் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
”அர்த" என்ற பெயரில் இணையத்தில் வெளியான சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு, தன்னை கைது செய்த விடயமானது, தன்னுடைய அடிப்படை உரிமையை மீறும் செயல் எனத் தெரிவித்து, எழுத்தாளர் சக்திக சத்குமார, முன்னாள் பொலிஸ்மா அதிபர், சட்டமா அதிபர் மற்றும் பொல்கஹவெல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
ஜூலை 15ஆம் திகதியான நேற்றைய தினம், கொழும்பு உச்சநீதிமன்றத்தின் அறை இலக்கம் 404 இல் நான்காவது தடவையாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், பிரதிவாதிகள் தமது தரப்பு நியாயங்களை முன்வைக்க இரண்டு வாரங்கள் கால அவகாசம் கோரியதாக சட்டத்தரணி சஞ்சய வில்சன் ஜெயசேகர சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.
இதற்கமைய நீதிபதிகள் வழக்கை 2021 ஒக்டோபர் 26 வரை ஒத்திவைத்தனர்.
எழுத்தாளர் சக்திக சத்குமார சார்பில் சட்டத்தரணிகளான புலஸ்தி ஹேவமாண்ண, சஞ்சீவ களுஆராச்சி மற்றும் சஞ்சய வில்சன் ஜெயசேகர ஆகியோர் முன்னிலையாகினர்.
சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சாசனத்தின் கீழ் கைது
”அர்த" என்ற பெயரில் இணையத்தில் சிறுகதையை வெளியிட்டு பௌத்தத்தை அவமதித்ததாக தெரிவித்து எழுத்தாளர் சக்திக சத்குமார சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சாசனத்தின் கீழ் 2019 ஏப்ரல் முதலாம் திகதி விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
அதன் பின்னர், 130 நாட்கள் சிறைவாசம் அனுபவித்த அவர் 2019 ஓகஸ்ட் 8 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டார்.
பௌத்த தகவல் மையத்தின் பணிப்பாளர் அங்குலுகஹ ஜினானந்த செய்த முறைப்பாட்டிற்கு அமைய எழுத்தாளர் கைது செய்யப்பட்டார்.
ஜூன் 2019இல், இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு அவரை நியாயமற்ற முறையில் கைது செய்து தடுத்து வைத்திருப்பதற்கு எதிராக ஒரு சர்வதேச போராட்டத்தை நடத்த ஆரம்ப ஒருங்கிணைப்பை மேற்கொண்டு சர்வதேசத்தில் கவனத்தை ஈர்த்தது.
எழுத்தாளர் சத்குமார மீதான வழக்கு பொல்கஹவெல நீதவான் நீதிமன்றத்தில் 2021 பெப்ரவரி 9 செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சிறையில் அடைக்கப்பட்ட நேரத்தில் அபிவிருத்தி அதிகாரியாக பொது சேவையில் பணியாற்றிய சக்திக சத்குமார பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் கடந்த 2019 டிசம்பர் 2ஆம் திகதி மீண்டும் பொது சேவையில் இணைந்துகொண்டார்.
சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சாசனத்தின் கீழ் மக்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதன் ஊடாக, பொலிஸார் சட்டத்தை துஷ்பிரயோகம் செய்வதாக ஐக்கிய நாடுகள் சபையும் இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவும் பலமுறை குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.