கப்பலினால் நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பிலான விசாரணைகளுக்காக, சர்வதேசத்தின் ஒத்துழைப்பினை பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் விசாரணை செய்யும் குழு நேற்று (20) கூடியபோதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணைகளில் கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழந்தமைக்கான காரணம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படுமென கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கும் ஆய்வுகூடத்தை கண்டறிந்து, உயிரிழந்த உயிரினங்களின் மாதிரிகளை அனுப்பி விசாரணை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அதிகார சபை கூறியுள்ளது.
இதற்கு பொருத்தமான ஆய்வுகூடத்தை கண்டறியும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதனிடையே, கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் X-Press Pearl கப்பலை, நாட்டின் கடல் எல்லையிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் தாமதமாகியுள்ளன.
குறித்த கடற்பிராந்தியத்தில் நிலவும் வானிலையினால் இந்த தாமதம் நிலவுவவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், கப்பலை விரைவில் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுமென கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.