நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு சரியான தீர்வுகளை வழங்க அரசாங்கம் தவறும் பட்சத்தில், பொது மக்களுடன் இணைந்து பௌத்த தேரர்களும் வீதிக்கு இறங்கும் காலம் வெகு தொலைவில் இல்லையென பௌத்த தேரர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்போது, அரசாங்கத்தின் செயற்பாடுகளோ, ரோம் நகரம் பற்றி எரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்த கதையாக மாறியுள்ளதாக, நாரஹென்பிட்டி அபயராமை விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
விகாரையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் போராட்டங்களை முன்னெடுத்துள்ள நிலையில், ரோம் நகரம் பற்றி எரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்த கதையாக இலங்கை அரசின் கதை மாறியுள்ளது.
ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறு நாம் கோரிக்கை விடுக்கின்றோம். இதனை நீளச் செய்ய வேண்டாம். அரசாங்கம் இதற்கு உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும். நாட்டில் நாளுக்கு நாள் பிரச்சினைகள் அதிகரித்துக்கொண்டு செல்கின்றன. இவற்றுக்கு தீர்வு வழங்க வேண்டியது அரச அதிகாரிகளின் பொறுப்பாகும்.
யாரும் தேவையின்றி வீதிக்கு இறங்குவதில்லை. அவர்களுக்கு ஏதோ பிரச்சினை காணப்படுகின்றது. அதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இது எதனை நோக்கி செல்கிறது என்பது எமக்குத் தெளிவாகின்றது. எமது நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலாகவே இது அமையும். பௌத்த தேரர்கள் மாத்திரமல்ல பொது மக்கள் அல்லது ஆலோசகர்கள் தெரிவிக்கும் எந்த கருத்துக்களையும் கேட்கும் நிலையில் அரசாங்கம் இல்லை.
அரசாங்கத்தை உருவாக்கியது பௌத்த தேரர்களே. நாங்கள் கூறுவதை இவர்கள் கேட்காவிடின், பொது மக்களின் கருத்துக்களுக்கு இவர்கள் செவிசாய்க்கவில்லையெனின், நாங்களும் பொது மக்களுடன் இணைந்து வீதியில் இறங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதை அரசாங்கத்திற்கு நினைவுபடுத்த விரும்புகின்றோம்.
கடந்த அரசாங்கத்தில் காணப்பட்ட குறைபாடுகளால், இந்த அரசாங்கத்தை நாம் உருவாக்கினோம். எனினும் இவர்களும் சரியாக செயற்படுவதாக தெரியவில்லை. இந்த அரசாங்கத்திற்கு சரியான வழிகாட்டல்களை வழங்க ஆலோசகர்கள் இல்லை. இதுவே பிரச்சினை அவர் மேலும் தெரிவித்துள்ளார்.