ஆசிரியர், அதிபர் சம்பள பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்காது இழுத்தடிப்பு செய்தால், தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாக எச்சரித்துள்ள இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க, வெற்றிக்கிடைக்கும் வரையில் போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், ஆசிரியர், அதிபர் சம்பள முரண்பாடுகளைத் தீர்க்கும் வகையில் அமைச்சரவையில் பத்திரமொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். அந்த அமைச்சரவைப் பத்திரத்தில் என்ன உள்ளது? அதில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பளம் எவ்வளவு என்று நாம் தொடர்ந்து வினவி வருகிறோம். ஆனால், உரிய பதில்கள் இதுவரையில் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் நேற்று முன்தினம் (27) நடைபெற்ற கலந்துரையாடலின்போது, இதுதொடர்பில் அமைச்சரவை துணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் உறுதியளிக்கப்பட்டதுபோல, வெள்ளிக்கிழமைக்கு (30) முன்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும்.
இப்பிரச்சினையை இழுத்தடிக்காது விரைவாக தீர்வு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் இதன்போது வலியுறுத்தினார். அவ்வாறு தீர்வு வழங்கப்படவில்லை என்றால், தொடர்ந்து போராடுவதற்கும் எதிர்காலத்தில் பல்வேறு வழியில் போராடப்போவதாகவும் எச்சரித்துள்ளதோடு, வெற்றி கிடைக்கும் வரையில் போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்தார்.