அரந்தலாவையில் பிக்குகளைக் கொல்லப்பட்ட விவகாரம் முன்னாள் விடுதலை புலிகள் உறுப்பினர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை கைது செய்யுமாறு தேரர் ஒருவர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அரந்தலாவையில் பிக்குகளைக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பில் சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சட்ட மா அதிபர் நேற்று உயர் நீதிமன்றுக்கு அறிவித்தார்.
சட்ட மா அதிபர் சார்பில் சிரேஷ்ட அரச சட்டவாதி கலாநிதி அவந்தி பெரேரா இதனை உயர் நீதிமன்றின் நீதியர்சர்களான பிரியந்த ஜயவர்தன, அச்சல் அவெங்கப்புலி மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய நீதியர்சர்கள் குழாம் முன்னிலையில் அறிவித்தார் அதோடு பிக்குகளைக் கொல்லப்பட்ட விவகாரத்தில் , தற்போது உயிருடன் உள்ளவர்களுக்கு எதிராக உடனடியாக விசாரணைகளை முன்னெடுக்க பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிடுமாறு கோரி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த படுகொலையின் போது உயிர் தப்பிய ஆஞ்சா உள்பன புத்தசார தேரரே இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவினை தாக்கல் செய்திருந்தார்.
அத்துடன் குறித்த படுகொலைகளுக்கு பொறுப்புக் கூற வேண்டியவர் என அவர் அடையாளப்படுத்தும் புலிகள் அமைப்பின் முன்னாள் பிரதானிகளில் ஒருவரான விநாயகமூர்த்தி முரளிதரன் எனும் கருணாவை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த காவல் துறை மா அதிபருக்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
சட்ட மா அதிபர், பதில் காவல் துறை மா அதிபர், தேசிய உளவுத் துறை பணிப்பாளர் சுரேஷ் சலே ஆகியோர் இம்மனுவில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர் குறித்த மனுவில் மனுதாரர் குறிப்பிட்டுள்ளதாவது,
1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் திகதி, முன்னெடுக்கப்பட்ட தாக்குதலில் 31 தேரர்களும் பொது மக்களும் கொல்லப்பட்டுள்ளனர் இந்த சம்பவத்துடன், தொடர்புடையவர்கள் பலர் உயிருடன் இருக்கும் நிலையில், அவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல் செய்ய கோரப்பட்டுள்ளது.
அதன்படி குறித்த சம்பவத்துக்கு பொறுப்புக் கூற வேண்டிய உயிருடன் உள்ளவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல் செய்ய உத்தரவிடுமாறு மனுதாரர் கோரியுள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு 2 கோடி ரூபா நட்ட ஈடும் கோரியுள்ளார்.
இந் நிலையில் இந்த மனு தொடர்பிலான பரிசீலனைகள் நேற்று இடம்பெற்ற போது, மனுதாரரான பிக்குவின் வாக்கு மூலத்தை சி.ஐ.டி.யினர் பதிவு செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் அவரின் மூலத்தை மையப்படுத்தி மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாக சிரேஷ்ட அரச சட்டவாதி அவந்தி பெரேரா மன்றில் சுட்டிக்கடடினார்.
இந் நிலையில் குறித்த மனுமீதான மேலதிக பரிசீலனைகள் எதிர்வரும் ஒக்டோபர் 12 ஆம் திகதிக்கு உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.