நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கடூழிய சிறை தண்டனை அனுபவித்துவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தனது நெருங்கிய உறவினரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார் என்று சிறைச்சாலைகள் தலைமையகம் தெரிவித்துள்ளது.
ரஞ்சன் ராமநாயக்கவின் மாமியாருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக நீர்கொழும்பில் உள்ள மலர்ச்சாலைக்கு அவரை அழைத்துச் செல்ல, ராமநாயக்கவின் உறவினர்களால் விடுக்கப்பட்ட வேண்டுகோளையடுத்து அவருக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும் (நிர்வாகம்) ஊடக பேச்சாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
அதன்படி, அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலையிலிருந்து சிறைச்சாலை பஸ்ஸில் நீர்கொழும்பில் உள்ள மலர்ச்சாலையில் இடம்பெற்ற இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள அழைத்துச் செல்லப்பட்டார்.
வெள்ளைச் சாரனும் சட்டையும் அணிந்திருந்த அவர் கைவிலங்கிடப்பட்டிருந்ததுடன், சிறிது நேரம் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர், சிறை அதிகாரிகளின் காவலில் சிறைச்சாலை பஸ்ஸில் அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு புறப்பட்டார்.