இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் இணைக்கப்பட்ட புதிய நிறுவனமொன்றை ஆரம்பித்து அதனூடாக எல்.பி. எரிவாயுவை சந்தைக்கு விநியோகிப்பதற்காக எரிசக்தி அமைச்சர் சட்டத்தரணி உதய கம்மன்பிலவிற்கு அதிகாரத்தை ஒப்படைக்க கடந்த 9ம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாக செய்திகள்
கூறுகின்றன.இலங்கைக்குத் தேவையான எல்.பி. எரிவாயு தேவையில் சுமார் 5 சதவீதத்தை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உற்பத்தி செய்வதோடு, லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கும், லாப் எரிவாயு நிறுவனத்திற்கும் அந்த உற்பத்தி சமமாக வழங்கப்படுகிறது.
இலங்கை வரலாற்றில் பாரிய முதலீடாக புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமொன்றை சபுகஸ்கந்த பிரதேசத்தில் நிர்மாணிப்பதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் எரிசக்தி அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டதன் பின்னர் உள்நாட்டு எரிவாயுத் தேவையில் சுமார் 20 வீதத்தை உற்பத்தி செய்வதற்கான உரிமை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைக்கப்படுமெனக் கூறப்படுகிறது.