கொடிய தொற்றுநோய்க்கு மத்தியில் நாடு மூடப்பட்ட போதிலும், முதலீட்டு ஊக்குவிப்பு வலையங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் உடல் நலம் மற்றும் தொழில் உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு ஆறு முன்னணி தொழிலாளர் உரிமை அமைப்புகள் தொழில் அமைச்சருக்கு அழைப்பு விடுத்துள்ளன.
நாடு முழுவதும் டெல்டா திரிபு வேகமாக பரவுவதால் ஏற்படும் பாதுகாப்பின்மை மற்றும் மக்களின் அமைதியின்மை காரணமாக நாட்டைப் முடக்குமாறு தொழிற்சங்கங்கள் உட்பட பல்வேறு தரப்பினரின் அழைப்புகளுக்கு பதிலளிக்கும் விதமாக அரசாங்கம் ஓகஸ்ட் 21, 2021 முதல் 10 நாட்களுக்கு நாட்டை முடக்கியுள்ளது.
இதற்கமைய அத்தியாவசிய சேவைகளைத் தவிர அரச, பகுதியான அரச மற்றும் தனியார் துறை
சேவை வழங்குநர்கள் தற்காலிகமாக தங்கள் சேவைகளை நிறுத்தியள்ளனர்.
இச்சூழ்நிலையில் முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களில் இயங்கிவரும் நாட்டின் முக்கிய அந்நிய செலாவணி வருவாயை ஈட்டித்தரும் ஆடை உற்பத்தி உட்பட பல விசேட தொழில்களை மூடுவது எளிதல்ல என அந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.
எனினும் நாட்டின் பொருளாதார செயல்முறைக்கு அதிக பங்களிப்பை வழங்கும் மற்றும் நாடு முழுவதும் முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களில் நிறுவப்பட்டிருக்கும் தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்கள், கோவிட் தொற்றுநோய் ஆரம்பித்ததிலிருந்து கடுமையான நெருக்கடிகளையும் நோய்களையும் எதிர்கொண்டுள்ளதாக, தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு எழுதிய கடிதத்தில் ஆறு முன்னணி தொழிலாளர் உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
ஸ்டாண்ட் அப் ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஷிலா தண்தெனிய, கட்டுநாயக்க ரெட் நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர் சந்திர தேவநாராயண, தைத்த ஆடைகள் முடிக்கப்பட்ட ஆடை மற்றும் ஜவுளி தொழிலாளர் சங்கத்தின் தலைமை அமைப்பாளர் லலிதா லலிதா ரஞ்சனி தெத்துவ குமார, தாபிது கூட்டு சங்கத்தின் சமிலா துசாரி, ஸ்ரமாபிமானி அமைப்பின் சுகத் ராஜபக்ச மற்றும் வணிக மற்றும் தொழில்துறை தொழிலாளர் சங்கத்தின் விஜேபால வீரகோன் ஆகியோர் இணைந்து கடந்த 24ஆம் திகதி தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிற்கு இந்த கடிதத்தை அனுப்பி வைத்துள்ளன.
இந்த கடிதம், முக்கியமாக பெண் தொழிலாளர்கள் துன்புறுத்தப்படுவது குறித்தும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
"பெரும்பான்மையான பெண் தொழிலாளர்கள் பணிபுரியும் இந்த வளாகங்கள் மிகவும் முக்கியமான மற்றும் சிறப்பு வாய்ந்த பகுதிகள் என்பதை உங்களுக்கு விளக்க வேண்டிய அவசியமில்லை. இந்த காலகட்டத்தில் அவர்கள் நோய் காவிகளாக வெளி உலகத்தின் பார்வையில் பார்க்கப்பட்டு கடுமையான அசௌகரியங்களுக்கு ஆளாகினர் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றோம்.”
”தொழிற்சாலை உரிமையாளர்கள் நாட்டை மூடுவதற்கான கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு ஜனாதிபதியின் அறிக்கைக்கு நன்றி தெரிவித்து விடுத்த அறிக்கையில் ஊழியர்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டாலும், ஊழியர்களின் உடல்நிலை மிகவும் திருப்தியற்ற நிலையில் உள்ளது என்ற உண்மையை உங்கள் அன்பான கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறோம். மேலும் நாட்டின் சட்டத்தால் உறுதி செய்யப்பட்ட ஊழியர்களின் தொழில்முறை உரிமைகளும் அதிகமாக மறுக்கப்பட்டுள்ளன என்பதை நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பரிந்துரைக்கப்பட்ட மற்றும் முறையான சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளைச் செயல்படுத்தத் தவறியமை, அன்டிஜென் மற்றும் பிசிஆர் சோதனையை சரியாக செய்ய தவறியமை, தடுப்பூசி போடுவதற்கான வாய்ப்பை கொடுக்காமல் தவிர்த்தல், பொது சுகாதார பரிசோதகர் அலுவலகங்களில் இருந்து போதிய ஒத்துழைப்பு இல்லாமை, அரச வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற இயலாமை, தொழிற்சங்க உரிமைகள் மறுப்பு மற்றும் ஊதியக் குறைப்பு, பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை அவர்களின் விடுதிக்கு அனுப்பிவிட்டு, பணம் செலுத்த வேண்டியுள்ளதால் வலயங்களுக்குள் அமைக்கப்பட்ட தனிமைப்படுத்தல் மையங்களுக்கு தொழிலாளர்களை அனுப்பாமை ஆகிய காரணங்களால் முதலீட்டு ஊக்குவிப்பு பகுதிகளுக்குள் பணிபுரியும் ஊழியர்கள் கொரோனா தொற்றுநோய் காரணமாக, உடல் மற்றும் மனரீதியாக அசாதாரணமான முறையில் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளனர்.
ஆகவே, இந்த நிலைமையால், தொழிலாளர்களின் உடல் மற்றும் உள துஷ்பிரயோகம் மற்றும் அநீதியால் பாதிக்கப்படுவதாக தொழிலாளர் தலைவர்கள், அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே, தொழிலாளர்களின் ஆரோக்கியம் மற்றும் தொழிற்சங்க உரிமைகளைப் பாதுகாப்பதற்காக பின்வரும் நியாயமான திட்டங்களை விரைந்து செயற்படுத்துமாறு, தொழிற்சங்கத் தலைவர்கள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
01 முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களுக்கான சிறப்பு சுகாதாரப் பாதுகாப்பு பரிந்துரைகளைத் தயாரித்து சமர்ப்பித்தல் மற்றும் தொடர்ச்சியான ஒழுங்குமுறைகளை செயல்படுத்துதல்
02.வேலை செய்யும் இடங்கள், உணவகங்கள், கழிவறைகள், சிறுநீர் கழிப்பிடங்கள், மற்றும் முதலுதவி அறைகளை கட்டாய கிருமி நீக்கம் செய்தல்.
03 முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களில் தனித்தனி தனிமைப்படுத்தல் மையங்களை
04 நிறுவுதல் மற்றும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட ஊழியர்களை அதற்கு முறையாக அனுப்பிவைத்தல்.
05 தற்போதுள்ள தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்புவதை கட்டாயப்படுத்தல்.
06 முதற் கட்ட தொடர்புடையவர்களை தெரிவு செய்து தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்புதல்.
07 ஒரு தொழிற்சாலையில் நடத்தப்படும் அன்டிஜென் மற்றும் பிசிஆர் சோதனையின் அளவை குறைந்தபட்சம் 40 வீதத்தால் அதிகரித்தல்.
08 முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களுக்கான பொது சுகாதார பரிசோதகர் அலுவலகங்களின் சேவைகளை விரிவாக்கம்.
09 தனிநபர் இடைவெளியை பாதுகாப்பதற்காக குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஊழியர்களை மட்டுமே வேலைக்கு அழைத்தல் மற்றும் வேலைக்கு அழைக்கப்படாத ஊழியர்களுக்கு ஊதிய விடுப்பு வழங்குதல்.
10 அனைத்து ஊழியர்களையும் வேலைக்கு அழைக்கும் தொழிற்சாலைகளில் அடிப்படை சம்பளத்தில் பாதி அல்லது 14,500 ரூபாய் மாத்திரமே செலுத்தப்படுமாயின், அத்தொழிற்சாலைகளுக்கு முழு சம்பளத்தையும் வழங்க உத்தரவிடுதல்.