கொத்தலாவல சட்டமூலத்தை ரத்துச் செய்யுமாறு ஆர்ப்பாட்டம் செய்தமையால், பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி கைது செய்யப்பட்ட 5 எதிர்ப்பாளர்களையும் விடுதலை செய்யுமாறு திருத்தப்பட்ட பிணை விண்ணப்பமொன்று ஹோமாகம உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த பிணை விண்ணப்பத்தை ஆராய்ந்த ஹோமாகம உயர் நீதிமன்றம் செப்டம்பர் 15ம் திகதி எதிர்ப்புகளை தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபருக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளது.
கைது செய்யப்பட்ட மாணவர் – மக்கள் செயற்பாட்டாளர்கள் 5 பேரும் இன்று (31) வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்ததோடு, இந்த வழக்கு கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரிக்கப்படவுள்ளது.
ஒகஸ்ட் 3ம் திகதி பத்தரமுல்ல, பாராளுமன்ற சந்திக்கு அருகாமையில் நடைபெற்று மாணவர் – மக்கள் இயக்கம் ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்ட தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள், மாணவர் சங்கங்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் கலைந்து சென்றதன் பின்பு மாணவர் மக்கள் இயக்கத்தின் கோஷிலா ஹன்ஸமாலி கைது செய்யப்பட்டார். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக் கழக மாணவர் சங்கத் தலைவர் அமில சந்தீப ஒகஸ்ட் 5ம் திகதி, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதன் பின்பு திரும்பிச் செல்லும் போது கடத்தப்பட்டார். அனைத்துப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த சந்தருவன் அன்றிரவு தொலைக்காட்சி விவாதமொன்றில் பங்கேற்றதன் பின்னர் வெளியேறிச் செல்லும் 06ம் திகதி அதிகாலையில் கைது செய்யப்பட்டார்.
இந்த செயற்பாட்டாளர்களில் மூன்று பேர், அதாவது, முன்னிலை சோஷலிஸக் கட்சியின் சமீர கொஸ்வத்த, அனைத்துப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் ஜயவர்தனபுர பல்கலைக் கழகத்தின் மாணவர் சங்கத் தலைவர் அமில சந்தீப ஆகியோர் கோவிட் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.