ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு கடிதம் அனுப்பும் விவகாரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் இரண்டு கடிதங்கள் அனுப்பப்பட்டமை, தமிழ் அரசு கட்சிக்குள் இரண்டு நிலைப்பாடு உள்ளமையையடுத்து இந்த கூட்டம் இன்று காலை கூடியுள்ளது.
சூம் (zoom) வழியாக இன்று காலை 10 மணிக்கு கூட்டம் ஆரம்பிக்கிறது.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு ரெலோவின் முன்னெடுப்பில் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த கடிதம் ஏற்கனவே, தமிழ் தேசிய கூட்டமைப்பின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
எனினும், தாம் ஒரு வரைபை தயாரிக்கும் தகவலை இறுதிவரை தமிழ் அரசு கட்சி தெரியப்படுத்தியிருக்கவில்லை. வரைபில் ஏனைய கட்சிகளும் கையொப்பமிட்டு, மாவை சேனாதிராசாவின் கையொப்பத்திற்கும் அனுப்பப்பட்ட பின்னரே, தமிழ் அரசு கட்சி ஆவணமொன்றை தயாரிக்கும் விடயமே கட்சி தலைவரான மாவை சேனாதிராசாவிற்கு தெரிய வந்தது.
ரெலோவின் ஆவணத்தில் கையொப்பிடலாமா என, தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் அனுமதி பெறுவதற்காக மாவை சேனாதிராசா தொலைபேசி வழியாக தொடர்பு கொண்ட சமயத்தில், அந்த தகவல கிடைத்திருக்கக் கூடும். அதன் பின்னரே, ரெலோவின் ஆவணத்தில் மாவை சேனாதிராசாவும் கையொப்பமிடாமல் தவிர்த்திருந்தார்.
நேற்று ரெலோவின் ஆவணம் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பப்பட்டது. நேற்றைய தினமே, தமிழ் அரசு கட்சி தயாரித்த ஆவணம், ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஏனைய தரப்பினரை “அடிமை மனநிலையில்“ நோக்கும் தமிழ் அரசு கட்சியின் மனப்பான்மையினால் இந்த விபரீதம் நிகழ்ந்தது. இந்த நிலையில், இன்று காலை தமிழ் அரசு கட்சியின் அரசியல்குழு கூட்டம் கூடுகிறது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் இரண்டும் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம் பற்றியும் இன்று பிரஸ்தாபிக்கப்படவுள்ளது.