புலிகள் அமைப்பின் அரசியல்த்துறையினரின் பிரதான மொழிபெயர்ப்பாளராக விளங்கிவந்த ஜோர்ஜ் மாஸ்டர் அல்லது தம்பி அப்பா என்றழைக்கப்பட்ட வேலுப்பிள்ளை குமார் பஞ்சரட்ணம் இன்று காலமாகியுள்ளார்.
யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தன்னுடைய முகநூலில் வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலிக் குறிப்பில் குறித்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
1936ஆம் ஆண்டு பிறந்த அவர் தபாலதிபராக பணியாற்றியுள்ளார். பின்னர் 1994 ஆம் ஆண்டு காலப் பகுதி தொடக்கம் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் துறையினருடன் இணைந்து மொழிபெயர்ப்புத் துறையில் செயற்பட்டுவந்திருக்கின்றார்.
இலங்கை அரசாங்கத்துடன் சர்வதேச நாடுகள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுக்களின் போது பிரதான மொழிபெயர்ப்பாளராகவும் அவர் செயற்பட்டிருக்கின்றார்.
இறுதிப்போரின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்திருந்த நிலையில் 2016 ஆம் ஆண்டு 07 ஆம் மாதம் 04 ஆம் திகதி அவருக்கு எதிரான அனைத்து வழக்குகளிலிருந்தும் கொழும்பு பிரதான நீதிமன்றம் விடுதலை செய்திருந்தது.
அன்றைய சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய அவர் குறித்த தீர்ப்பினை கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய அறிவித்திருந்தார்.