நிதி அமைச்சர் அஜித் நிவர்ட் கப்ரால் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் மீண்டும் ஜயந்த கெட்டகொட நாடாளுமன்ற உறுப்பினராகவுள்ளார்.
இந்நிலையில் அஜித் நிவர்ட் கப்ரால் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக மீண்டும் நியமிக்கப்படுவார் என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி கப்ரால் தனது இராஜினாமா கடிதத்தை நாடாளுமன்ற பொதுச்செயலாளரிடம் இன்று பிற்பகல் ஒப்படைக்கவுள்ளார்.
அத்துடன் இவ் வார இறுதியில் இலங்கை மத்திய வங்கியின் 16 வது ஆளுநராக அஜித் நிவர்ட் கப்ரால் பொறுப்பேற்கவுள்ளார். இந்த நிலையில் அஜித் நிவர்ட் கப்ரால் இராஜினாமா செய்ததை அடுத்து வெற்றிடமாக உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்காக ஜயந்த கெட்டகொடவை நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முடிவு செய்துள்ளது.
கடந்த 2000 ஆம் ஆண்டில் முதன்முறையாக கொழுப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியதுடன் பின்னர், நாடாளுமன்றத்தை கலைக்கப்பட்டதை அடுத்து 2001 இல் மீண்டும் அவர் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.
இதனை அடுத்து 2011 ஆம் ஆண்டில் அவருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கிடைத்ததுடன், 2020 ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக நாடாளுமன்றத்துக்கு ஜயந்த கெடகொட தெரிவு செய்யப்பட்டார்.
தொடர்ந்து கடந்த மாதம் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தேசியப்பட்டியில் ஊடாக நாடாளுமன்றத்துக்கு நுழைவதற்கு வழி வகுக்கும் வகையில் ஜயந்த கெடகொட இராஜினாமா செய்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.