சிறைச்சாலைகள் ராஜாங்க அமைச்சர் கடந்த 12ம் திகதி இரவு அனுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்று அடாவடித்தனமாக நடந்து கொண்டுள்ளதாக தமிழ் காங்கிரஸின் தேசியப்பட்டியல் உறுப்பினர் ஜீ.ஜீ.பொன்னம்பலம் கூறியுள்ளார்.
அரசாங்கத்தின் அமைச்சரொருவர் ஹெலிகொப்டரில் அனுராதபுரத்திற்கு சென்று அனுராதபுரம் சிறைச்சாலையில் சண்டித்தனமா நடந்துக்கொண்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டாரவும் கூறியுள்ளார்.
அங்கு LTTE சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள வார்டுக்குச் சென்ற அவர், அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள 8 சந்தேக நபர்களில் இருவரை வெளியில் எடுத்து மண்டியிடச் செய்து அவர்களின் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
மாத்திரமல்ல, ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கடந்த 12ம் திகதி மாலையில் தனது நண்பர்கள் சிலருடன் வெலிக்கட சிறைச்சாலைக்குள் நுழைந்து தூக்குமரம் இருக்கும் இடத்திற்கு அருகில் சென்றுள்ளார். அதன் போது இவர் குடிபோதையில் இருந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
இந்த சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன ஏகநாயக்கவிடம் விசாரித்த போது இந்த சம்பவம் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாதெனக் கூறியுள்ளார். சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜெனரல் துசார உபுல்தெனிய இது சம்பந்தமாக கூறுகையில், விடயத்திற்குப் பொறுப்பான ராஜாங்க அமைச்சர் தனது அலுவலர்களுடன் வெலிக்கட சிறைச்சாலைக்கு வந்து கைதிகளுடன் அவர்களுக்கு மன்னிப்பு வழங்குவது குறித்து பேசியதாகவும், சிறைச்சாலைகளுக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சிறைக் கைதிகளை சந்தித்து பேசுவதற்கு தடை கிடையாதெனவும் கூறினார்.
.