அநுராதபுரம் சிறையில் வைத்து தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் கைதிகள் புனர்வாழ்வு அமைச்சுப் பதவியை லொஹான் ரத்வத்தே இராஜினாமா செய்துள்ள நிலையில், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய எவ்வாறு தனது பதவியில் தொடர்கிறார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இது குறித்து கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“இந்தச் சம்பவம் குறித்து சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய மற்றும் சிறைச்சாலை அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்கவிடம் ஊடகங்கள் கேள்வி எழுப்பியிருந்தன.
எனினும், அவ்வாறான சம்பவம் எதுவும் பதிவாகவில்லை என்றே அவர்கள் கூறியிருந்தனர். இந்நிலையில், லொஹான் ரத்வத்தேயின் இராஜினாமா, துஷார உபுல்தெனிய மற்றும் சந்தன ஏக்கநாயக்க ஆகியோர் இந்த சம்பவத்தை மூடிமறைக்க வேண்டுமென்றே ஊடகங்களுக்கு பொய் சொன்னதை தெளிவுபடுத்தியுள்ளது.
கடந்த 12ம் திகதி அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்ற இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே, தமிழ் அரசியல் கைதிகளை வரவழைத்து, அவர்களில் இருவரை அவருக்கு முன் மண்டியிட்ட செய்துள்ளார்.
அத்துடன், அவர்கள் மீது துப்பாக்கியைக் காட்டி அந்த இடத்திலேயே கொலைசெய்து விடுவேன் என அச்சுறுத்தியுள்ளார். இந்த சம்பவம் ஊடகங்களில் வெளியான பிறகு, பிரதமர் மஹிந்த ராஜபக்ச லொஹான் ரத்வத்தேவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அமைச்சு பதவியை இராஜினாமா செய்யுமாறு கோரியிருந்தார்.