தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள் தொடர்பில் கோட்டாபய ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு வழங்கியுள்ள உறுதி
காணாமல்போனவர்களுக்கு மரண சான்றிதழ்களை வழங்குதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் துரித நடவடிக்கைளை எடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொள்ள நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்ரஸை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
இதன்போது ஐ.நா. பொதுச் செயலாளரிடம் ஜனாதிபதி கோட்டாபய, நவம்பர் மாதத்திற்கு முன்னர் 15 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் முழுமையாக தடுப்பூசி வழங்கும் பணிகளை நிறைவு செய்வதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் காணாமல்போன நபர்கள் தொடர்பில் அரசாங்கத்தினால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை வெகுவிரைவில் முன்னெடுப்போம்.
மரண சான்றிதழ்களை வழங்குதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் துரித நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்படும்.
தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்த பின் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருப்பதை கவனத்தில் கொண்டு அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்க தயங்க மாட்டேன்.
மேலும், இலங்கையில் மீண்டுமொருமுறை பிரிவினைவாதம் உருவாக மாட்டாது என்று உறுதியளிக்க முடியும். மத அடிப்படைவாதம் தொடர்பில் அரசாங்கம் என்ற ரீதியில் இலங்கையைப் போன்றே ஏனைய அனைத்து நாடுகளும் விழிப்புடன் இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.