பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர ஹிட்லராக மாற முயற்சிப்பதாக இலங்கை ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார குற்றம் சுமத்தியுள்ளார்.
இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கூறுகையில்,
அன்று மஹிந்த ராஜபக்ச தோல்வியடைந்து வீட்டுக்கு சென்ற போது நானே முதன் முதலாவதாக அவரை தங்காலையில் மீளவும் ஓர் மேடையில் ஏற்றினேன்.
இப்போது என்னை விமர்சனம் செய்யும் அமைச்சர்கள் அப்போது இருக்கவில்லை. அவர்களுக்கு எதிரான ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் அம்பலமாகும் என அவர்கள் வெளியே தலைகாட்டவில்லை.
நான் எந்தவொரு குற்றச் செயலையும் செய்யவில்லை, எந்தவொரு ஒழுக்காற்று விசாரணையையும் எதிர்கொள்ளத் தயார்.
சரத் வீரசேகர அமைச்சுப் பதவியில் இருந்திருக்காவிட்டால் ஆசிரியர் போராட்டங்கள் இவ்வளவு பூதாகாரமாகியிருக்காது.
ஆசிரியர்களையும், பௌத்த பிக்குகளையும் கைகால்களை பிடித்து தூக்கிச் சென்றதனால் சமூகத்தில் இந்தப் போராட்டம் தொடர்பில் அனுதாபம் ஏற்பட்டது.
போராட்டங்களில் ஈடுபடுவோர் பயங்கரவாதிகள் என அமைச்சர் கூறுகின்றார், அமைச்சர் சரத் வீரசேகர ஹிட்லரைப் போன்று செயற்பட முயற்சிக்கின்றார்.
பிரச்சினைகளை பற்றி பேசுவோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முயற்சிக்கப்படுகின்றது.
ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமாயின் முதலில் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்திற்கு எதிராகவே எடுக்க வேண்டும்.
அமைச்சர்கள் ஒன்றிரண்டு பேரை சந்தோசப்படுத்த ஒழுக்காற்று நடவடிக்கை செய்யக் கூடாது என ஜகத் குமார தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமாரவின் இந்தக் குற்றச்சாட்டுக்கள் பொதுஜன பெரமுனவுக்குள் உட்கட்சி மோதல் உக்கிரமடைவதை எடுத்துக் காட்டுவதாக அரசயில் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.