மதுபோதையில் கைத்துப்பாக்கியுடன் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று தமிழ் அரசியல் கைதிகளுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த லொஹான் ரத்வத்தவை இதுவரையில் கைது செய்யப்படாதது ஏன்? எனக் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி.யான எஸ்.சிறிதரன் சபையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேவேளை மனநோயால் பாதிக்கப்பட்ட நிலையில்தான் லொஹான் ரத்வத்த அந்த சிறைக்கு சென்றாரா? எனவும் சிறிதரன் சபையில் கேள்வி எழுப்பியதுடன், இலங்கையில் இதுவரையில் இடம்பெற்ற சிறைச்சாலை படுகொலைகளுக்கு நீதி வழங்கபட்டதாக வரலாறு இல்லையெனவும், தமிழ் அரசியல் கைதிகளே இவ்வாறு இலக்குவைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என அவர் சபையில் சுட்டிக்காட்டினார்.
மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் அறிவித்தல், துறைமுகங்கள் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் 05 கட்டளைகள், விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான 06 கட்டளைகள், வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழான 03ஒழுங்குவிதிகள், வெளிநாட்டு செலாவணிச் சட்டத்தின் கீழான கட்டளை மற்றும் இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழான ஒழுங்கிவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.