கல்வி தனியார்மயத்திற்கும், ராணுவமயத்திற்கும் எதிராக ஆர்ப்பாட்டம் செய்தமையால் சிறைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் பிணை கோரி ஹோமகம உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒக்டோபர் 5ம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளது.
இந்த சிறைப்படுத்தல் சம்பந்தமாக சட்டமா அதிபர் விளக்கமளிக்க வேண்டியிருந்த நிலையில் இன்று அவர் நீதிமன்றத்திற்கு வராமையால் வழக்கு விசாரணை ஒக்டோபர் 5ம் திகதி வரை 14 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒகஸ்ட் 3ம் திகதி பாராளுமன்றத்திற்கு அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது காட்போட் பெட்டியொன்றை எரித்து அரச சொத்துக்களை சேதப்படுத்திய குற்றத்தின் பேரில் மேற்படி 5 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இது தொடர்பான வழக்கு கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது எதிர்ப்பாளர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பல விடயங்கள் வெளிச்சத்திற்கு வந்தன.
நீதிபதி இரண்டு முறை நீதிமன்றத்திற்கு வராமையால் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டு மேற்படி 5 பேருக்கும் அநீதியிழைக்கப்பட்டுள்ளது. விசேடமாக இவர்கள் சிறையில் இருக்கும்போது கோவிட் தொற்றியமையால் அவர்களை தொடர்ந்தும் சிறையில் வைத்திருப்பது பலிவாங்கும் நோக்கத்தில் தானெனவும் கூறப்படுகிறது.