ஆளும் கட்சி தலைமைத் தேர்தலில் வெற்றி பெற்றதைத்தொடர்ந்து, ஜப்பானின் அடுத்த பிரதமராக புமியோ கிஷிடா பதவியேற்க உள்ளார்.
ஜப்பான் நாட்டின் பிரதமராக இருந்துவந்த ஷின்சோ அபே, உடல்நிலையைக் காரணம் காட்டி கடந்த ஆண்டு பதவி விலகினார். இதனையடுத்து யோஷிஹிதே சுகா புதிய பிரதமராக பதவியேற்றார்.
இந்நிலையில், யோஷிஹிதே சுகா தலைமையிலான அரசு கொரோனா தொற்று பரவலைக் கையாண்ட விதம் குறித்து ஜப்பான் மக்களிடையே கடும் அதிருப்தி எழுந்தது. இதனையடுத்து யோஷிஹிதே சுகா, கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்திருந்தார். ஜப்பானில் ஆளுங்கட்சியின் தலைவராக இருப்பவரே பிரதமராக பொறுப்பேற்பார் என்பதால், ஆளுங்கட்சியான சுதந்திர ஜனநாயகக் கட்சிக்குள் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில், சுதந்திர ஜனநாயக கட்சித் தலைவருக்கான தேர்தலில் புமியோ கிஷிடா வெற்றி பெற்றுள்ளார். இதனையடுத்து இவர் ஜப்பான் நாட்டின் பிரதமராக பதவியேற்க உள்ளார். நடந்த இந்த தேர்தலில் கோனோ என்பவரும், புமியோ கிஷிடாவும் முதல் வாக்கு எண்ணிக்கையில் கிட்டத்தட்ட சமநிலையில் இருந்தபோதிலும் இறுதியில், கிஷிடா 257 வாக்குகளைப் பெற்றார். கோனோ 170 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை தழுவினார்.
புமியோ கிஷிடா ஏற்கனவே 2012 - 2017இல் ஜப்பானின் வெளியுறவுத்துறை மந்திரியாக பதவி வகித்தவர். கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற கட்சித் தலைவருக்கான தேர்தலில் தற்போதைய பிரதமர் யோஷிஹிதே சுகாவிடம் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.