அரசாங்கத்தின் தரவுகள் தளத்தில் களஞ்சியப்படுத்திருந்த தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தரவுகள் அழிக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் எபிக் லங்கா டெக்னொலொஜி தனியார் நிறுவனத்தின் உதவிப் பொறியியலாளரொருவர் குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தினால் நேற்று (28) கைது செய்யபட்டுள்ளார்.
குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தின் தடயவியல் ஆய்வக அதிகாரிகள் இந்த உதவிப் பொறியியலாளரை கைது செய்துள்ளனர். தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தரவுகளை அழிக்க உத்தரவிட்ட நபர் என்ற வகையில ஐ.பி. எண் ஊடாக இந்த சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டதாக திணைக்களம் கூறுகிறது.
சம்பவம் தொடர்பில் மொரட்டுவை பல்கலைக் கழக விஞ்ஞானக் கூடத்தில் மற்றும் குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தின் தடயவியல் ஆய்வின் பின்னர் குறித்த ஐ.பி. எண் அடையாளம் காணப்பட்டதாகவும், தரவுத் தளத்திற்குள் வேண்டுமென்றே நுழைந்து குற்றம் செய்த சந்தேகத்தின் பேரில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகவும் திணைக்களம் கூறுகிறது. சந்தேக நபர் இன்று (29) கொழும்பு பிரதான நீதவான் முன்னிலை ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் இதற்கு முன்பும் எபிக் லங்கா டெக்னொலோஜி தனியார் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி தரிந்த தல்பகே குற்றவியல் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.