சிறுவர்களின் உரிமைகள் மற்றும் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்ய ஒவ்வொரு குழந்தையும் பிறக்கும் போதே தேசிய அடையாள அட்டை இலக்கம் வழங்கப்பட வேண்டும் என்று முன்னணி வைத்தியர் தொழிற்சங்கம் பரிந்துரைத்துள்ளது.
சிறுவர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்துவதற்காக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தலைமையில் தொழில்நுட்ப குழு அமைக்கப்பட்டுள்ளதோடு, தடுப்பூசி போடப்பட்ட சிறுவர்களுக்கு அடையாள அட்டை இலக்கமொன்று இல்லாமை கவனத்தை ஈர்த்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
பிறக்கும் போது குழந்தைகளுக்கு தேசிய அடையாள அட்டை இலக்கத்தை வழங்குவதற்கான பரிந்துரையை குடும்ப சுகாதார பணியகம் முன்னர் சமர்ப்பித்ததாகவும் தொழில்நுட்பக் குழு குறிப்பிட்டுள்ளது.
குழந்தைகளின் உரிமைகளை உறுதி செய்வதற்காக பிறப்பிலேயே தேசிய அடையாள அட்டையை வழங்க வேண்டுமென, புதிய அரசியலமைப்பை உருவாக்குவது குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவில் கடந்த வருடம் டிசம்பர் 30ஆம் திகதி பரிந்துரைத்துள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் வைத்தியர் செனல் பெர்னாண்டோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த இலக்கம் அடங்கிய அடையாள அட்டையை 16 வயதில் அல்லது அதற்கு முன்னதாகவே அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிறக்கும் போது குழந்தைகளுக்கு தேசிய அடையாள அட்டை இலக்கத்தை வழங்குவதன் ஐந்து நன்மைகளை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
1. தாய்நாட்டில் குடியுரிமை பற்றிய உணர்வு ஏற்படும்
2. சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர் அடிமைத்தனத்தின் விளைவுகளிலிருந்து சிறுவர்களை பாதுகாக்க முடியும்
3. நாடு முழுவதும் உள்ள சிறுவர்களுக்கான சீரான சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான அடையாள முறையாகப் பயன்படுத்த முடியும்.
4. சிறுவர்களின் கல்வி மற்றும் சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்ய இரகசிய அடையாள இலக்கமாக இதனைப் பயன்படுத்த முடியும்.
5. வரையறுக்கப்பட்ட வளங்களை சிறுவர்களுக்கு வழங்குவதில் சமத்துவத்தை உறுதிப்படுத்த முடியும்.
குறித்த தீர்மானங்கள் சிறுவர்களின் உரிமைகள் மற்றும் சமூக பாதுகாப்பை எவ்வாறு உறுதி என்பதை தெளிவுபடுத்தும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.