ஊழல் மோசடிகளை ஊடகவியலாளர்கள் வெளிச்சத்திற்கு கொண்டுவந்ததன் பின்னர், குறித்த ஊழல் பேர்வழிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்காமல், உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த ஊடவியலாளர்களை குற்றவியல் விசாரணைத் திணைக்களத்திற்கு அழைத்திருப்பதை கண்டிப்பதாக அறிக்கையொன்றின் மூலம் ஊடக அமைப்புகள் ஒன்றியம் கூறுகிறது.
பாவனையாளர்கள் சேவைகள் அதிகார சபையின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் துஷான் குணவர்தனவினால் வெள்ளைப் பூடு மோசடி உட்பட மோசடிகள் சம்பந்தமாக வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததன் பின்னர், இந்தச் செய்தியை வெளியிட்ட லங்காதீப, திவைன, மற்றும் தி ஐலண்ட பத்திரிகைகளின் ஊடகவியலாளர்களை குற்றவியல் விசாரணைத் திணைக்களத்திற்கு அழைத்துள்ளதை வன்மையாக கண்டிப்பதாகக் கூறும் ஒன்றியம், இது, ஊழல் மோசடி பேர்வழிகளை பாதுகாப்பதற்காக மோசடிகள் வெளிப்படுத்தப்படுவதை தடுக்கும் மானங்கெட்ட முயற்சியாகுமெனவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
ஊடகப் சேவையாளர் தொழிற்சங்க சம்மேளனத்தின் செயலாளர் தர்மசிறி லங்காபேலி, சுதந்திர ஊடக அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சீதா ரஞ்சனி, இலங்கை தொழில் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் துமிந்த சம்பத், இலங்கை முஸ்லிம் ஊடக மன்றத்தின் தலைவர் என்.எம்.அமீன், தமிழ் ஊடக மன்றத்தின் செயலாளர் கணபதிபிள்ளை சர்வானந்தா மற்றும் இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் செயலாளர் இந்துனில் உயங்கொட ஆரச்சி ஆகியவர்களின் ஒப்பத்துடனும், 6 ஊடக அமைப்புகளின் தலைமையிலும் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.