மன்னார் பேசாலை, வங்காளைப்பாடு பிரதேச கிராம உத்தியோகத்தரும், சில மீனவர்களும் சில கடற்படை வீரர்களினால் தாக்கப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. இந்த தாக்குதல் தொடர்பில் முறைப்பாட்டை ஏற்றுக் கொள்ள பொலிஸார் மறுத்துள்ளனர்.
தனது தந்தை கடல் தொழிலுக்குச் சென்றுவிட்டு செப்படம்பர் 24ம் திகதி வெள்ளிக்கிழமை சரியான நேரத்தில் வீட்டுக்கு வராமையால், இது சம்பந்தமாக விசாரிப்பதற்காக கிராம உத்தியோகத்தரான மீனவரின் மகன் கடற்கரைக்குச் சென்றுள்ளார். அங்கு குடிபோதையில் இருந்த இரு கடற்படை வீரர்கள் தனது தந்தையை தாக்கியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
இது குறித்து வினவிய கிராம உத்தியோகத்தர் மற்றும் சிவில் உடையிலிருந்த கடற்படை வீரர்களுக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ள நிலையில், பிரதேசத்திலுள்ள மேலும் சில மீனவர்கள் அவ்விடத்தில் கூடியுள்ளனர். அதன்போது மேலும் எட்டு கடற்படையினரையும் அவ்விடத்திற்கு அழைத்து கிராம உத்தியோகத்தர் மற்றும் அங்கிருந்த மீனவர்களையும் தாக்கியுள்ளனர்.
இது குறித்து தாக்கப்பட்டவர்கள் பேசாலை பொலிஸில் முறைப்பாடு செய்யச் சென்றாலும் பொலிஸார் முறைப்பாட்டை ஏற்றுக் கொள்ளவில்லையெனக் கூறுகின்றனர்.
தாக்குதலினால் காயமடைந்த இரு மீனவர்கள் பேசாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.