திருகோணமலை எண்ணெய் தொட்டிப் பண்ணையை இந்தியாவிடம் ஒப்படைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களில் எந்த ஆதாரமும் இல்லை என்று எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
எரிசக்தி அமைச்சில் இன்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
1987 மற்றும் 2003 ஆம் ஆண்டுகளில் ஐ.தே.க அரசாங்கங்கள் கைச்சாத்திட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தங்களால் 100 தொட்டிகள் இந்தியாவுக்கு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றைத் திரும்ப பெற முயற்சிப்பதாகவும் அவர் கூறினார்.
எனினும், இந்திய வெளியுறவு செயலாளருடன் ஹெலிகொப்டர் மூலம் திருகோணமலைக்கு சென்று எரிபொருள் தொட்டிகளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் நகைப்புக்குரியவை என்று தெரிவித்த அவர், அமைச்சரான பின்னர் யாருடனும் தான் ஹெலிகொப்டரில் செல்லவில்லை என்றும் தெரிவித்தார்.
திருகோணமலை எண்ணெய் தொட்டிகளை ஒப்படைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு, ஒருவர் அதன் அருகில் செல்ல வேண்டியதில்லை என்றும் உலகில் எங்கிருந்தும் கையெழுத்திட்டாலும் ஒப்பந்தங்கள் செல்லுபடியாகும் என்றும் குறிப்பிட்டார்.
2023 இல் இந்த தொட்டிகள் இலங்கைக்கு திருப்பித் தரப்படும் என்று சிலர் கூறினாலும், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் அத்தகைய விதி இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.