நிலுவையில் இருக்கும் மாகாண சபைத் தேர்தல்களை அடுத்த மார்ச் மாதத்திற்கு முன்னர் நடத்தி முடிப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளது என நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச (Basil Rajapaksa) இன்று நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் கூட்டத்தில் அறிவித்துள்ளார்.
இதற்காக மாகாண சபைத் தேர்தல்கள் சட்டமூலம் புதிதாக நாடாளுமன்றில் கொண்டுவந்து நிறைவேற்றப்பட வேண்டும். இவ்விடயத்தில் வீண்கால தாமதங்களைத் தவிர்ப்பதற்காக, இது தொடர்பில் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் எம்.பி. நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கும் தனிநபர் பிரேரணையைக் கையில் எடுத்து புதிய மாற்றங்களோடு அதை விரைந்து நிறைவேற்றுவதற்கு ஆராயப்படுவதாகவும் இன்று நாடாளுமன்றத் தெரிவுக்குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
தேர்தல் முறைமைகள் தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையிலான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் கூட்டம் இன்று நாடாளுமன்றில் நடைபெற்றது.
இந்த தெரிவுக்குழுவுக்குப் புதிதாக சேர்க்கப்பட்ட நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவும், எதிர்க்கட்சி உறுப்பினர் ரவூப் ஹக்கீமும் இன்றைய கூட்டத்துக்கு முதல் தடவையாக சமூகம் தந்தனர். அச்சமயத்தில் மாகாண சபைத் தேர்தலை உடன் நடத்துவதற்கு அரசு தீர்மானித்துள்ளது என பஸில் ராஜபக்ச கூறினார்.
எதிர்வரும் மார்ச் மாதத்துக்கு முன்னர் தேர்தலை நடத்த வேண்டும் என்று அரசு தீர்மானித்துள்ளது எனவும், அதற்காக மாகாண சபைத் தேர்தல் சட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டிய தேவை இருக்கின்றது எனவும் அவர் அங்கு சொன்னார்.
இந்த விடயத்தில் சில சமயங்களில் நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆதரவு தேவைப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.