ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் ஆளும் தரப்பின் முக்கிய பிரதிநிதிகள் மற்றும் பௌத்த தேரர்கள், யாத்திரீகர்கள் உட்பட சுமார் 125பேர் கொண்ட குழுவினர் இந்தியாவிற்குப் பயணமாகவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இதுதொடர்பில் இந்தியா ருடே மற்றும் த டைம்ஸ் ஒப் இந்தியா போன்ற ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்தியா உத்தரபிரதேசத்தில் உள்ள குஷிநகரில் அமைக்கப்பட்டுள்ள புதிய விமான நிலையத்தினை எதிர்வரும் 20ஆம் திகதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.
இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ஆளும் தரப்பின் முக்கிய பிரதிநிதிகள் மற்றும் பௌத்த தேரர்கள், யாத்திரீகர்கள் உட்பட125பேர் கொண்ட குழுவினருடன் இலங்கையிலிருந்து திறக்கப்படும் புதிய விமான நிலையத்தை சென்றடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் காணப்படுகின்ற சமய மற்றும் கலாசார இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் முகமாகவே அங்குரார்ப்பண நிகழ்விற்கு இலங்கையிலிருந்து முதலாவது விமானம் அழைக்கப்பட்டுள்ளதாக அந்த ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.