பால் மா விலை அதிகரிப்பானது இந்த சந்தர்ப்பத்தில் மக்களுக்கு தாங்கி கொள்ள முடியாத நிலைமை என்பதுடன் இப்படியான நிலைமையில் வர்த்தக அமைச்சு எதற்கு என்ற கேள்வி எழுப்பபட்டு வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச(Wijedasa Rajapaksa) தெரிவித்துள்ளார்.
தலவத்துக்கொட கனேலந்த ரஜமஹா விகாரையில் தென்னங்கன்றுகள் வழங்கல் மற்றும் சமாதான நீதவான்களுக்கு நியமனக்கடிதங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
‘‘இப்படியான சந்தரப்பங்களில் அரசாங்க நிர்வாகம் ஒன்றில்லை என்ற உணர்வே மக்களுக்கு ஏற்படும். திறந்த பொருளாதாரத்துடன் விலைகளை கட்டுப்படுத்துவது கஷ்டமான விடயமாக இருந்தாலும் கொள்கை ஒன்றை உருவாக்கிக்கொண்டிருந்தால், பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்தி இருக்க முடியும்.
அவ்வாறான கொள்கையை உருவாக்க முயற்சித்ததன் காரணமாக தற்போது தன்னை வெளியில் தள்ளியுள்ளனர்‘‘ எனவும் விஜயதாச ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.