பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தம்மை விடுதலை செய்யுமாறு உத்தரவிடுமாறு கோரி, மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் இன்று (11) அனுமதி வழங்கியுள்ளது.
ஜயந்த ஜயசூரிய, எஸ். துரைராஜா, யசந்த கோதாகொட ஆகிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் குறித்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
சட்டமா அதிபர் சார்பில் ஆஜராகியிருந்த சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், அசாத் சாலி சார்பில் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணிகளான பைஸர் முஸ்தபா மற்றும் மைத்ரி குணரத்ன ஆகியோர் முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த நீதியரசர்கள் குழாம், அரசியலமைப்பின் பிரகாரம் 12/1 மற்றும் 13/1 ஆகிய சரத்துகளின் கீழ் மனுவை விசாரணை செய்வதற்கு அனுமதி வழங்கியது.