பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை சம்பந்தமாக குற்றஞ்சாட்டி கோஷிலா ஹன்ஸமாலி பெரேராவை சிறையிலடைத்திருப்பது நியாயமற்ற செயலாகுமென்பது நேற்று (12) கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கோஷிலா ஹன்ஸமாலி மீது எவ்விதக் குற்றமும் இல்லை என்பதுடன், சமர்ப்பிக்கப்பட்ட வீடியோ காட்சிகளில் கூட குறித்த இடத்தில் அவர் இருந்ததற்கான எந்த சான்றுகளும் இல்லை. கடந்த வழக்கு விசாரணையின் போது தலங்கம பொலிஸினால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சாட்சிகளின் தொகுக்கப்பட்ட அறிக்கையிலும் கோஷிலா ஹன்ஸமாலியின் பெயர் குறிப்படவில்லை.
இது குறித்து சட்டத்தரணிகள் வினவியபோது, நேற்று தலங்கம பொலிஸ் குறித்த இடத்தில் கோஷிலா ஹன்ஸமாலி இருக்கவில்லை என்பதற்கான அறிக்கையொன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர். என்றாலும், அவருக்காக தோற்றிய சட்டத்தரணிகள் விடுத்த பிணை கோரிக்கையை நீதிபதி நிராகரித்துள்ளார்.
கொத்தலாவல சட்டமூலத்திற்கு எதிரான “இலவசக் கல்விக்கான மாணவர் மக்கள் இயக்கம்” ஒகஸ்ட் 03ம் திகதி பாராளுமன்றத்தின் முன்பாக நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது, பொலிஸார் போட்டிருந்த இரும்பு தடைகளை சேதப்படுத்தியமை, காட்போட் வடிவத்திலான சவப் பெட்டியொன்றை எரித்து பாதையை சேதப்படுத்தியமை சம்பந்தமாக குற்றம் சுமத்தி கோஷிலா ஹன்ஸமாலி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். இவர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில், இது சம்பந்தமான வழக்கு நேற்று கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அதன்போது, இந்த செயற்பாட்டாளர்களுக்கு எதிராக பொய்க் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக சட்டத்தரணிகள் முக்கிய காரணிகளை முன்வைத்தனர்.