எனது மகனை திட்டமிட்டு கொலை செய்து விட்டு எங்களை தற்போது அலைய விடுகின்றனர் என, இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின்(Viyalendran) வீட்டின் முன்னால் அவரது மெய்பாதுகாவலரால் சுட்டுக் கொல்லப்பட்ட பாலசுந்தரத்தின் தாயார் தெரிவித்துள்ளார்.
குறித்த படுகொலை வழக்கு இன்று மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி ரிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக உயிரிழந்த பாலசுந்தரத்தின் தாயார் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
“கடந்த வாரம் ஏறாவூர் பொலிஸார் தங்களது வீட்டுக்கு வந்து இன்றைய தினம் வழக்கு விசாரணை உள்ளது, நீதிமன்றத்திற்கு வரும்படி தெரிவித்தனர். எனினும் இன்றையதினம் நீதிமன்றத்திற்கு நாங்கள் வந்து காத்திருந்தும் இரகசியமாக வழக்கு விசாரணை நடைபெற்றுள்ளது.
காலை எட்டு மணி தொடக்கம் ஒரு மணி வரைக்கும் எங்களை வெளியில் நிற்கவைத்து விட்டு இறுதியாக நாங்கள் நீதிமன்றத்திற்குள் உள்நுழையும் போது எமது மகன் தொடர்பான வழக்கு நடந்து முடிந்ததாக தெரிவித்தனர்.
பணம் பதவியை வைத்துக் கொண்டு மண் உரிமத்துக்கு பணத்தை வாங்கிவிட்டு எனது மகனுடன் கதைப்பதாக கூறி அடித்து கொலை செய்து விட்டு எங்களையும் இப்படி சித்திரவதை செய்கின்றனர். எனது மகனை திருப்பி என்னிடம் தருவார்களா? எனது மகன் கொலை செய்யப்பட்ட போது பலர் இராஜாங்க அமைச்சர் வீட்டில் இருந்துள்ளனர். யாருமே எமக்கு சாட்சி சொல்ல முன்வருகிறார்கள் இல்லை.
நீதிபதி எமக்கு நல்ல தீர்வை பெற்று தர வேண்டும். கௌரவ நீதிபதி குறித்த வழக்கை சிஐடிக்கு மாற்றக் கோரியும் மட்டக்களப்பு பொலிஸாரால் குறித்த வழக்கினை இதுவரை கொடுக்கவில்லை. மீண்டும் இந்த வழக்கு நவம்பர் மாதம் முதலாம் திகதி அழைக்கப்படவுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.