படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின்(Mayilvaganam Nimalarajan) 21வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டக்களப்பு ஊடக அமையம் ஆகியனவற்றின் ஏற்பாட்டில் ஊடக அமையத்தில் இந்த நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.
மூத்த ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு, சுடர் ஏற்றப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டு உயிர்நீர்த்த ஊடகவியலாளருக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மூத்த ஊடகவியலாளருமான பா.அரியநேத்திரன், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றிய பொருளாளர் பு.சசிகரன் உட்பட ஊடகவியலாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
2000ஆம் ஆண்டின் ஒக்டோபர் 19ம் நாள் இரவு யாழ். குடாநாட்டின் முன்னணி ஊடகவியலாளர் நிமலராஜன் தனது வீட்டில் வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
நிமலராஜன், தான் பணியாற்றிக்கொண்டிருந்த ஊடகங்களிற்கு செய்திகளை அறிக்கையிட்டுக்கொண்டிருந்த போதே சுடப்பட்டிருந்தார் என்பதுடன் அவரது தந்தை மற்றும் மருமகன் ஆகியோரும் இதன் போது படுகாயம் அடைந்தனர்.
தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழியில், பிபிசி தமிழோசை, அதன் சிங்கள சேவையான சந்தேசிய உள்ளிட்ட வானொலிகள், நாளிதழ்கள், ராவய உள்ளிட்ட தமிழ், சிங்கள வார இதழ்களென அவர் பணியாற்றிக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதே வேளை யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில்இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடக அமையத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.
அதன் போது மலர்மாலையை யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் மற்றும் வலி.கிழக்கு பிரதேச சபை தவிசாளர் நிரோஷ் ஆகியோர் நிமலராஜனின் திருவுரு படத்திற்கு அணிவித்தனர். அதனை தொடர்ந்து மாநகர சபை உறுப்பினர் ஜெயசீலன் சுடரேற்றியதை தொடர்ந்து, ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.
போர் சூழலில் யாழில் இருந்து , துணிவாக ஊடகப்பணியாற்றியவர் மயில்வாகனம் நிமலராஜன். பி.பி.சி.யின் தமிழ் மற்றும் சிங்கள சேவை , வீரகேசரி,ராவய போன்ற ஊடகங்களில் பணியாற்றி இருந்தார்.
அந்நிலையில் கடந்த 2000ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19ம் திகதி யாழ்.மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளை இவரது வீட்டு வளவினுள் புகுந்த ஆயுத தாரிகள், வீட்டின் யன்னல் ஊடாக அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.
அதன் போது அவர் எழுதிக்கொண்டு இருந்த கட்டுரை மீது வீழ்ந்தே உயிர் துறந்தார்.கொலையாளிகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு நிமலராஜனை படுகொலை செய்த பின்னர்,வீட்டின் மீது கைக் குண்டு தாக்குதலையும் மேற்கொண்டனர்.
அதன் போது வீட்டில் இருந்த நிலமராஜனின் தந்தை சங்கரப்பிள்ளை மயில்வாகனம்,தாய் லில்லி மயில்வாகனம் மற்றும் மருமகன் ஜெகதாஸ் பிரசன்னா ஆகியோர் படுகாயமடைந்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.