தவறான அறிவுறுத்தலின் பேரிலேயே இரசாயண உரம் பயன்படுத்துவதை தடை செய்யும் வர்த்தமானி வெளியிடப்பட்டதாக விவசாய அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித் கே ஜயசிங்க கூறுகிறார்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபகஷவோ அல்லது அரசாங்கமோ அல்லது விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரோ இதற்கு பொறுப்பல்ல என்றும், உயர்மட்ட அரசியல் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கும்போது சரியான முறையில் செயற்பட்டிருக்க வேண்டுமென்றும் செயலாளர் குறிப்பிடுகிறார்.
ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை அறிக்கையை தயாரிப்பதில் தானும் பங்கேற்றதாகக் கூறும் செயலாளர், அவர்களுக்கு தேவைப்பட்டதெல்லாம் நச்சு விவசாய இரசாயண உரம் பயன்படுத்தப்படும் கலாச்சாரத்திலிருந்து நச்சுத் தன்மையற்ற தரமான மிக உயர்வான தாவர ஊட்டச்சத்துக்களின் பயன்பாட்டை அறிமுகப்படுத்துவதுதான் எனவும் கூறினார்.
எனவே, விவசாய இரசாயணங்கள் பயன்படுத்தப்படுவதை தடை செய்து வர்த்தமானி வெளியிடுவதற்குப் பதிலாக உயர் தரத்தைக் கொண்ட சூழல் சார்ப்பு தாவர ஊட்டச்சத்துக்கள் இறக்குமதிக்கு அனுமதியளிக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவசர அவசரமாக மேற்கொள்ளப்பட்ட இரசாயண உரத்திற்கான தடையினால் தமது பயிர்ச்செய்கையை மேற்கொள்ள முடியாத விவசாயிகள் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், அரசாங்கமானது தனது தீர்மானத்தை பல்வேறு நபர்களின் மீது சுமத்தி தப்பிக் முயல்வதையும் காணக்கூடியதாக உள்ளது.