கட்சி வேறுபாடுகள் இருந்தபோதிலும் குடும்பங்களை மீள்குடியேற்றுவதன் மூலம் தமிழ் மக்களை அரசியல் ரீதியாக பலவீனப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிக்கு தமிழ் கட்சிகள் பேதங்களுக்கு அப்பால் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
வடக்கின் மாகாண எல்லைகளை உடனடியாக மாற்றி சனத்தொகை முறையை செயற்கையாக மாற்றுதை நிறுத்துமாறுகோரி வடக்கு கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பாதுகாப்பு மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் சமல் ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
17வது நிகழ்ச்சியான ‘கிராமத்துடன் உரையாடல்’ நிகழ்ச்சிக்காக பெப்ரவரி 3ஆம் திகதி ஜனாதிபதி அவர்கள் போகஸ்வெவ என அழைக்கப்படும் கொச்சியாங்குளம் கிராமத்திற்கு விஜயம் செய்த போது, சிங்கள பெரும்பான்மை பிரதேசங்களில் இருந்து ஆயிரக்கணக்கான குடும்பங்களை வடமாகாணத்தின் வவுனியா மாவட்ட எல்லைக்கு மீள்குடியமர்த்துவதற்கான திட்டம் வெளிப்படுத்தப்பட்டது.
அன்றைய தினம், “கெபிதிகொல்லாவ பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கனுகஹவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 600 குடும்பங்களும், அநுராதபுரம் மாவட்டத்தின் பதவிய பிரதேச செயலகப் பிரிவில் உள்ள கம்பிலிவெவ, வெஹரதென்ன ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 430 குடும்பங்களும் வவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரதேச வைத்திய அதிகாரி பிரிவில் தங்கவைக்கப்படவுள்ளனர். என வவுனியா அரசாங்க அதிபர் எம்.சமன் பந்துலசேன அதிமேதகு ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.ஏ.சுமந்திரனும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் ஒக்டோபர் 22ஆம் திகதி முன்னணி அரசியல்வாதிகளால் அனுப்பப்பட்ட கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.
போகஸ்வெவக்கு மேலதிகமாக, நாமல்கம 1, 2, சலலிஹினிகம மற்றும் நந்திமித்திரகம ஆகிய புதிய குடியிருப்புகளில் போருக்குப் பின்னரான குடியேற்றங்கள் ஏற்கனவே மாகாணத்திற்கு வெளியில் இருந்து இராணுவத்தினர் உட்பட சிங்கள குடும்பங்களை குடியேற்றியுள்ளன.
“மாகாண எல்லைகளை மாற்றும் இந்த முயற்சியின் அடிப்படை நோக்கம் மக்கள்தொகையை மாற்றி தமிழ் மக்களின் அரசியல் பலத்தை பலவீனப்படுத்துவதாகும். மாகாண எல்லைகளை மாற்றுவது, நாட்டின் மூலோபாய முடிவு, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் உட்பட சம்பந்தப்பட்ட கட்சிகளுடன் கலந்தாலோசித்து செய்யப்பட வேண்டும். எனினும், அவ்வாறானதொரு கலந்துரையாடல் ஒருபோதும் இடம்பெறவில்லை” என தமிழ் அரசியல்வாதிகள் தெரிவிக்கின்றனர்.
செல்வம் அடைக்கலநாதன், செல்வராஜா கஜேந்திரன், சுப்ரமணியம் நோஹாரதலிங்கம், சிவஞானம் ஸ்ரீதரன், ஷானக்யன் ராசமாணிக்கம், சார்ள்ஸ் நிர்மலநாதன் தமிழ் தேசிய முன்னணியின் தவராசா கலையரசன் ஆகியோரும் கையெழுத்திட்டனர்.
அநுராதபுரம் மாவட்டத்தில் பதவிய மற்றும் கெபத்திகொல்லாவ பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட வவுனியா நகருக்கு கிழக்கிலும் தெற்கிலும் சுமார் 40 கிலோமீற்றர் தொலைவில் குடும்பங்கள் மீள்குடியேற்றப்படவுள்ள புதிய கிராமம் அமைந்துள்ளது.
சேனை விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்ட 478 குடும்பங்களைச் சேர்ந்த 1200 பேர் தற்போது அதே பிரதேசத்தில் வசித்து வருவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.