உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் மூடி மறைக்கப்படுவதாக யார் மீதும் குற்றம் சுமத்தப்பட முடியாது என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர(Sarath Weerasekara) தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
பொலிஸாரினால் செய்யக்கூடிய நடவடிக்கைகள் பூர்த்தியாகியுள்ளன. அனைத்து விசாரணைகளும் பூர்த்தி செய்து சட்ட மா அதிபரிடம் அறிக்கை ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஐந்து மேல் நீதிமன்றங்களில் 9 வழக்குகள் விசாரணை செய்யப்பட்டு வருகின்றன. இதற்கான திட்டத்தை வகுத்த 24 தீவிரவாதிகளுக்கு எதிராக ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவர் அடங்கிய குழுவொன்று நாள் தோறும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது. பொலிஸ் திணைக்களத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு விட்டன, இனி சட்ட மா அதிபரின் கைகளிலேயே தங்கியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.