ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் புதிய வர்த்தமானி உத்தரவுகளினால் ஊழியர்களின் உரிமைகள் வெட்டப்படுவதாக தொழிற்சங்கங்கள் கூறுகின்றன.
அத்தியாவசிய சேவைகள் கட்டளைகளின் கீழ் நிறுவப்ட்டுள்ள மக்கள் சேவையாற்றும் நிறுவனங்கள் எப்போதும் மக்கள் சேவைக்காக தியாகத்துடன் பணியாற்றும் ஊழியர்களைக் கொண்டவையாகும். ஏற்கனவே பெருந்தொற்றினால் தாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவிற்குப் போதுமான சம்பள அதிகரிப்பு உட்பட கொடுப்பனவுகளையும் கேட்கும் காலம் வந்துள்ளது. அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் கூட்டாக பேரம் பேசுதல் உட்பட தொழில் நடவடிக்கைகள் ஊடாக வரவு-செலவு திட்டத்திலிருந்து நிவாரணம் பெற்றுக் கொள்வதற்குத் தயாராகின்றனர். அரசாங்கத்தின் புதிய உத்தரவுகள் மூலம் ஊழியர்களின் இந்த உரிமை பறிக்கப்பட்டுள்ளது.
துறைமுகம், எரிபொருள், தபால், புகையிரத திணைக்களம், போக்குவரத்துச் சபை சேவைகள், பொருட்கள் மற்றும் பயணிகள் போக்குவரத்து மற்றும் இலங்கை மத்திய வங்கி உட்பட அரச வங்கிகள் ஆகிய நிறுவனங்கள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம் செய்து விசேட வர்த்தமானியொன்றை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. ஜனாதிபதியின் தேவைக்கேற்ப, ஜனாதிபதி செயலாளர் கலாநிதி பி.பீ.ஜயசுந்தர ஒக்டோபர் 29ம் திகதி இந்த விசேட வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.
கோத்தாபய ராஜபக்ஷ ஆட்சியின் இரண்டு வருடகாலத்தில் இத்தகைய உத்தரவுகளை நடைமுறைப்படுத்தி, பல்வேறு சேவைகளைச் சார்ந்த அலுவலர்களை பலவந்தமாக அடிபணிய வைத்தார்களேயன்றி, 2019 நவம்பர் 16 ஜனாதிபதித் தேர்தலின் போதும் 2020 ஒகஸ் 5ம் திகதி பொதுத் தேர்தலின்போதும் வழங்கிய எந்தவொரு வாக்குறுதியையும் இந்த அரசாங்கம் நிறைவேற்றவில்லையென தொழிற்சங்கப் பிரதிநிதிகள் சுட்டிக் காட்டுகின்றனர்.
நாட்டு மக்களின் வாழ்க்கைக்குத் தேவையான குறித்த சேவைகளை தடையின்றி நடாத்திச் செல்லும் நோக்கத்திலேயே இந்த வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடப்படுவதாக அரசாங்கத்தின் தலைவர்கள் கூறுகின்றனர். ஆனால் மக்களுக்கு சேவைகளை வழங்குவதில் அரசாங்கத்தின் இயலாமை வெளிப்படையாகத் தெரிவதுடன், பெருந்தொற்று காலத்தில் கூட ஓய்வில்லாமல் சேவை செய்து மக்களுக்காக கடமைகளை செய்த பிரதான பொருளாதார மற்றும் மக்கள் சேவைகளுக்கு பலவந்தமாக உத்தரவிட்டு அரசாங்கம் தனது இயலாமையை மறைக்க முயற்சி செய்கிறது.