போதைப்பொருள் வர்த்தகம் உட்பட பல்வேறு தவறான நடத்தைகளில் ஈடுபட்டுவரும் பொலிஸ் அதிகாரிகளுக்கெதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு செயற்பட்டு வருகின்றோம். இவ்வாறான பொலிஸ் அதிகாரிகளின் நடவடிக்கை போதைப்பொருள் கடத்தல்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கு பெரும் தடையாக இருக்கின்றதென பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் வேறு சட்டவிரோத குற்றச்செயல்களுடன் பொலிஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்டு வருவது தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், போதைப்பொருள் வர்த்தகம், இலஞ்சம் பெற்றுக்கொள்ளல், போதைப்பொருள் பாவனை உட்பட பல்வேறு தவறான நடத்தைகளில் ஈடுபட்டுவரும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுத்துவருகிறோம்.
பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் பொலிஸ் அதிகாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் இவ்வாறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கெதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க இருப்பதுடன் அவர்களுக்கெதிராக தண்டனை பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுத்துவருகின்றோம்.
அதேபோன்று பொலிஸ் திணைக்களத்தில் கடமையிலிருக்கும் அதிகாரிகள் சிலர் போதைப்பொருள் பாவனை மற்றும் வர்த்தகத்துடன் தொடர்புபட்டிருப்பதாகவும் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இந்த முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.
இவ்வாறான பொலிஸ் அதிகாரிகளின் செயற்பாடு, போதைப்பொருள் கடத்தல், வர்த்தக நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்துக்கு பெரும் தடையாக இருக்கின்றது. அதனால் இதுதொடர்பில் விரைவாக நடவடிக்கை எடுக்க எதிர்பார்க்கின்றோம் என்றார்.