யாழ்ப்பாணத்திலுள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக வேலையற்ற ஆயுர்வேத பட்டதாரிகள் இன்றைய தினம் ஆர்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
ஆயுர்வேத வைத்தியர்களுக்கு அரச நியமனம் வழங்குமாறு வலியுறுத்தி அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது “ஜனாதிபதி அவர்களே, பிரதமர் அவர்களே அனைத்து சித்த வைத்திய பட்டதாரிகளுக்கும் உடனடியாக வேலை வாய்ப்பை வழங்கு, ஆயுர்வேத வைத்தியர் குறைபாட்டினை உடனடியாக நிவர்த்தி செய், தேர்தல் வாக்குறுதி வெறும் பேச்சில் மட்டுமா?, பட்டதாரிகளின் பட்டம் வீட்டில் முடக்கப்பட்டுமா?, இன்னும் எத்தனை காலம் தான் இழுத்தடிப்பு, சுதேச மருத்துவம் அரசுக்கு தேவையில்லையா, சேதனப் பசளையை ஊக்குவிக்கும் அரசு சுதேச மருத்துவத்தை நிராகரிப்பது ஏன்?” போன்ற கோஷங்களை எழுப்பிய வண்ணம் போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
போராட்டத்தின் பின்னர் வடமாகாண ஆளுநருக்கும், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் மகஜரொன்று கையளிக்கப்பட்டுள்ளது.