தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பறிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எடுத்துள்ள தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கேட்டு பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகே உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
மனுவில் பிரதிவாதிகளாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, கட்சியின தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்ற செயலாளர் தம்மிக தசநாயக, தேர்தல் ஆணையத்தின் தலைவர் நிஹால் ஜி புஞ்சிஹேவா மற்றும் தேர்தல் ஆணையர் ஜெனரல் சமன் ஸ்ரீ ரத்நாயக உட்பட 11 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
அரசியலமைப்புச் சட்டத்தின் 20 வது திருத்தம் நிறைவேற்றப்படும் தருணத்தில் அதற்கு சார்பாக வாக்களித்ததாக குற்றஞ்சாட்டி தனது கட்சி உறுப்புரி;மையை பறிக்க பிரதிவாதிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தனது பா.உறுப்பினர் பதவி பறிக்கப்படுவதற்கு முன்னர் நியாயமான ஒழுக்காற்று விசாரணையொன்றை மேற்கொள்ள பிரதிவாதிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டும் மனுதாரர், இதனால் தனது இயற்கை நீதி தர்மம் என்ற சட்டரீதியான அடிப்படை மீறப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, தனது கட்சி உறுப்புரிமையை பறிக்க ஐக்கிய மக்கள் சக்தி எடுத்திருக்கும் முடிவை சட்டத்தின் முன்பாக வலுவிழக்கச் செய்து தீர்ப்பு வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகே உயர் நீதிமன்றத்திடம் கேட்டுள்ளார்.