திருகோணமலை மாவட்டத்தில் ஏனைய காடுகள் விடுவிப்பு திட்டத்திற் கீழ் வெருகல் பிரதேசத்தில் ஏற்கனவே முன்னர் பயிர் செய்த 600 ஏக்கர் அளவிலான காணிகள் இம்முறை பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்காக மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று(5) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஒருங்கிணைப்பு குழு தலைவருமான கபில அத்துகோரல (Kapila Athukorala) தலைமையில் நடைபெற்றது.
மாவட்டத்தில் பயிர் செய்ய முடியுமான பிரதேசங்களை இணங்க அப்பிரதேசங்களில் போக பயிர்செய்கை செய்வதற்குரிய ஏற்பாட்டின் கீழ் காணி விடுவிப்பு நடைபெற்றதாக மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள (Saman Darshana Pandikorala) தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
இதன் மூலம் மாவட்டத்தினுடைய உற்பத்தியை அதிகரித்து நாட்டினுடைய பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செலுத்தக் கூடியதாக அமையும்.
பயிர் செய்ய முடியுமான ஒவ்வொரு பிரதேசத்திலும் உற்பத்தியை மேற்கொண்டு நாட்டினுடைய உற்பத்தி பொருளாதாரத்தை மேம்படுத்துவது அரசாங்கத்தினுடைய மூல நோக்கங்களில் ஒன்றாக காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.
சுற்றாடலுக்கு பங்கம் ஏற்படாத வகையில் சுற்றாடலை பாதுகாத்து பிரதேசத்தில் இருக்கக்கூடிய பயிர் செய்ய முடியுமான பிரதேசங்களில் உற்பத்தியை மேற்கொள்வதன் மூலம் மக்களுடைய வாழ்வாதாரத்தையும், வருமானத்தையும் அதிகரிக்க கூடியதாக அமையும் என்று இதன் போது நாடளுமன்ற உறுப்பினர் கபில அத்துகோரல தெரிவித்துள்ளார்.
யுத்தத்திற்கு முன்னர் தாம் இப்பிரதேசங்களில் பயிர்ச்செய்கெயை மேற்கொண்டு வந்ததாகவும், நடைபெற்ற யுத்தம் காரணமாக இப்பிரதேசங்களில் பயிர் செய்வதற்கு முடியாத நிலைமை ஏற்பட்டது.
இதன் காரணமாக இப்பிரதேசம் கைவிடப்பட்ட பிரதேசமாகக் காணப்பட்டது.
கடந்த காலங்களில் இப்பிரதேசத்தில் பயிர் செய்வதற்கான அனுமதியை உரிய அதிகாரிகளிடம் கோரிய போதும் அதற்கு அனுமதி கிடைக்கப் பெறவில்லை.
இது தொடர்பில் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அரசாங்க அதிபரின் கவனத்துக்கும் கொண்டு வந்ததாகவும் மிக குறுகிய காலத்தில் பயிர் செய்வதற்காக விடுவித்து பயிர் செய்வதற்கான அனுமதியை வழங்கியமை குறித்து பிரதேச மக்கள் நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்கள்.
இந்நிகழ்வில் வெருகல் பிரதேச செயலாளர் மொஹமட் கனி (Mohamed Gani) , பிரதேச அரசியல் தலைமைகள் உரிய பொதுமக்களும் கலந்து கொண்டுள்ளனர்.