ராஜபக்ஷ சகோதர்களுக்கு வாக்களித்த 69 இலட்சம் பேரில் பெரும்பாலானோர் விவசாயிகளே என்று தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, விவசாயிகளை சகோதர்கள் இப்போது பழி வாங்குகின்றனர் என்றும் தெரிவித்தார்.
வீதிகளை விரிவுபடுத்துவதற்கும் அபிவிருத்தி செய்வதற்கும் முன்னர் மக்களின் வாழ்க்கை வசதிகளை இந்த நேரத்தில் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
100,000 கிலோ மீற்றர் வீதிகளை காபெட் செய்யும் அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பூர்த்தி செய்யப்பட்ட 1,500 வீதிகளை திறந்து வைத்தமை தொடர்பில், இன்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்ட விடயத்தைத் தெரிவித்தார்.
விவசாயிகளைப் பலப்படுத்துவோம், அபிவிருத்தி செய்வோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், விவசாயிகளை முற்றாக அழித்துள்ளதாகவும் குற்றம் சுமத்தினார்.
விவசாயிகள் வீழும்போது கிராமிய அபிவிருத்தி முற்று முழுதாக வீழ்ச்சியடையும் என்றும் மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ ஆகிய ராஜபக்ஷ சகோதர்களுக்கு வாக்களித்த 69 இலட்சம் பேரில் பெரும்பாலானோர் இந்த பிரதேச மக்களே என்று தெரிவித்தார்.
இது விவசாயிகள் மீதான கோபம் போலவே தனக்குத் தெரிவதாகவும் என்றும் தமக்கு வாக்களித்த அவர்களை ராஜபக்ஷ சகோதரர்கள் பழிவாங்குவதாகவும் தெரிவித்தார்.
வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்புக்கே அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், அதற்கு அடுத்த படியாக வீதி அபிவிருத்திக்கே நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
சுகாதாரத்துக்கோ, கல்விக்கோ அவ்வளவாக நிதி ஒதுக்கப்படவில்லை என்றும் இதுவா நீங்கள் கேட்ட மாற்றம் என்றும் கேள்வியெழுப்பினார்.