ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நடத்துவதாக கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் ஏன் தற்போது அந்த விசாரணைகளை நடத்துவதில்லை என பிரபல சிங்கள திரைப்பட நடிகை வீனா ஜெயகொடி கேள்வி எழுப்பியுள்ளார்.
அருட் தந்தை சிறில் காமி இன்று நீதிமன்றத்திற்கு சென்றிருந்த போது, அவருக்கு ஆதரவு வழங்கும் வகையில் கத்தோலிக்க திருச் சபையின் அருட் தந்தையர்கள் நீதிமன்ற வளாகத்திற்கு வந்திருந்தனர்.
நடிகை வீனா ஜெயகொடியும் அங்கு வருகை தந்திருந்ததுடன் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே மேற்கொண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இதற்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்கங்கள். நாங்கள் அதனையே கோருகிறோம்.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பந்தமாக விசாரணை நடத்துவதாக கூறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், அது தொடர்பான விசாரணைகளை சரியான முறையில் நடத்துவதில்லை.
வாக்குறுதி வழங்கியது போல் ஏன் அதனை நிறைவேற்றுவதில்லை. ஏற்கனவே இந்த விடயம் சர்வதேசத்திற்கு சென்று விட்டது. முழு உலகத்திற்கும் பதில் கூற நேரிடும்.
இதில் இருந்து எவரும் தப்பிக்க முடியாது. எங்களிடம் இருந்து தப்பித்தாலும் இறைவனிடம் இருந்து தப்பிக்க முடியாது. இறைவன் இதனை கைவிட மாட்டார்.
இதனால், நாங்கள் அச்சமின்றி இருக்கின்றோம். நடக்க போவது நடக்கும். இதன் பலனை நாம் அனைவரும் அனுபவிக்க நேரிடும்.
ஏற்கனவே இது நாட்டிற்கு சாபமாக மாறியுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் இறைவனிடம் பதில் கூறியே ஆக வேண்டும் எனவும் வீனா ஜெயகொடி குறிப்பிட்டுள்ளார்.