இராணுவத்தினரைக் கொண்டு விவசாயிகளின் கழுத்தைப் பிடித்து, சேதனப் பசளையை பயன்படுத்த வைப்பதற்கு தன்னால் முடியும் என தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, எனினும் அவ்வாறு பலத்தை பிரயோகிப்பதற்குத் தான் விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.
புதிதாக அபிவிருத்தி செய்யப்பட்ட 1,500 வீதிகளை ஒரே நாளில் மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வின் பின்னர், நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான் இராணுவ ஆட்சியாளராக வருவேன் என எதிர்பார்த்து மக்கள் எனக்கு வாக்களித்தனர். ஓர் இராணுவ அதிகாரியைப் போல மக்களை கழுத்தைப் பிடித்து ஆட்சி செய்ய முடியும், ஆனால் நான் அப்படி செய்ய எண்ணவில்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
நான் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் அழிந்துவிடும் என சிலர் கூறுகின்றனர், ஆனால் அவ்வாறு பலத்தை பிரயோகிக்க நான் விரும்பவில்லை எனவும் ஜனாதிபதி கூறினார்.
‘நல்லாட்சி’ அரசாங்கத்தின் கீழ், முன்னாள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் பாரிய பரிவாரங்களுடன் பயணம் செய்திருந்ததை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த தாம் விரும்புவதாக தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டில் கலந்துகொண்டபோது, தனது மனைவியுடன் சாதாரண ஹோட்டலில் தங்கியதாகவும் மனைவியின் விமான டிக்கெட் மற்றும் ஹோட்டல் தங்குவதற்கு தானே பணத்தை செலுத்தியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை முந்தைய ஜனாதிபதிகள் சொகுசு விடுதிகளில் தங்கியிருந்ததாக சிலர் தன்னிடம் கூறியதாக தெரிவித்த ஜனாதிபதி , தான் அப்படிச் செய்யவில்லை என்றும், மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய தேவை உள்ளதாகவும் அவர் இதன்போது மேலும் குறிப்பிட்டார்.